குடியால் விபரீதம்.. போதையில் வேகம் வேகமாக சாப்பிட்ட இளைஞர்... தொண்டையில் ‘பரோட்டா’ சிக்கி பலி!
கோவை: கோவையில் குடிபோதையில் வேகமாகச் சாப்பிட்டபோது, பரோட்டோ தொண்டையில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அம்மன்குளம் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகன் ரஞ்சித்குமார் (32). தந்தையும் காவலாளி பணிக்கு அவ்வப்போது சென்று வந்த ரஞ்சித்திற்கு இன்னும் திருமணமாக வில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவும் தந்தையும் காவலாளி பணிக்கு சென்றுள்ளார் ரஞ்சித்.

முதலில் குடி...
இரவு 10.30 மணியளவில் இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பரோட்டாவை அவர்கள் சாப்பிட்டு உள்ளனர். முதலில் சாப்பிட்டு முடித்த ஜெயபால் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தபடியே தூங்கி விட்டார்.

பலி...
ஆனால், ரஞ்சித் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது தொண்டையில் பரோட்டா சிக்கியது. இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால், இவை எதுவும் தெரியாமல் ஜெயபால் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.

அதிர்ச்சி...
பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது வாயில் பரோட்டாவுடன் ரஞ்சித் அசையாமல் படுத்திருப்பதைக் கண்டு ஜெயபால் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தார் உதவியுடன் ரஞ்சித்தை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் விசாரணை...
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில், குடிபோதையில் இருந்த ரஞ்சித்குமார், பரோட்டாவை வேகமாக சாப்பிடும்போது அது தொண்டையில் சிக்கி, மூச்சுத்திணறலால் அவர் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications