கேரளா கேரேஜில் இருந்து வேனை லவட்டி வந்த இளைஞர்... மடக்கிப் பிடித்த போலீசார்!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கேரேஜில் நிறுத்தி வைத்திருந்த வாகனத்தை கடத்தி வந்த இளைஞரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
புளியரை : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வாகன பழுதுபார்க்கும் இடத்தில் இருந்து பிக்அப் வேனை கடத்தி வந்த இளைஞரை புளியரை அருகே போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தையடுத்த மடத்தரையை சார்ந்தவர் பைஜூ இவர் அங்கு வாகன பழுதுபார்க்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அதிகாலையில் தனது பணிமனைக்கு சென்ற போது அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த புதிய பிக்கப் வாகனத்தை காணவில்லை.
இதுகுறித்து அவர் கடைக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தமிழக கேரள எல்லைகளில் உள்ள காவல்நிலையங்களுக்கு தகவல் அளித்தனர்.இதனைத்தொடர்ந்து நெல்லைமாவட்டம் புளியரையிலுள்ள போலீஸ் வாகன சோதனைச்சாவடியில் உதவி ஆய்வாளர்கள் ராஜேஸ்வரன்,அலெக்ஸ் மேனன்,மனோகர் மற்றும் போலீசார் அதிகாலை முதல் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர்.
அப்போது வேகமாக வந்த ஒருவாகனத்தை மறித்து வாகனத்தை ஓட்டிவந்தவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் திருவனந்தபுரம் மடத்தரை பகுதியைச்சார்ந்த சலீம் மகன் ஷாஜி என்பது தெரியவந்தள்ளது. மடத்தரையிலுள்ள வாகன பழுதுபார்க்கும் நிறுவனத்திலிருந்து வாகனத்தை திருடிவந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து வாகனத்தை கைப்பற்றி,அவரை கைது செய்து கேரள மாநில போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.கடைக்கல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஜெயக்குமார்,அஜித்குமார் ஆகியோர் வாகன பணிமனையின் உரிமையாளரோடு விரைந்து வந்து வாகனத்தையும்,அதனை கடத்திய நபரையும் திருவனந்தபுரத்திற்கு கொண்டு சென்றனர்.