ஹாசினி கொலை வழக்கு குற்றவாளி தஷ்வந்த் தாயை கொலை செய்து விட்டு தப்பியோட்டம்
ஹாசினி கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள தஷ்வந்த் பணம் தராததால் தனது தாயையும் கொன்று விட்டு தலைமறைவாகியுள்ளார்.
சென்னை: ஹாசினி கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள இளைஞர் தஷ்வந்த் தனது தாயை பணத்துக்காக கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போரூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பாபு- ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ஹாசினி (7). கடந்த பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த ஹாசினியை அதே குடியிருப்பில் வசித்துவரும் மென்பொருள் பொறியாளர் தஷ்விந்த் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் பெட்ரோல் ஊற்றி படுகொலை செய்துள்ளார்.
இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் கொலை, பலாத்காரம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்தில் குற்றவாளி தஷ்வந்த் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தஷ்வந்த் தந்தை வழக்கு
தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் தஷ்வந்த் மீது சென்னை காவல் ஆணையர் குண்டர் சட்டம் பாய்வதாக அறிவித்தார். இந்நிலையில் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அவருடைய தந்தை சேகர் (50) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

குண்டர் சட்டம் ரத்து
இந்த வழக்கு விசாரணையின் போது போலீஸார் குற்றத்தை நிரூபிப்பதற்கான முறையான ஆவணங்களைத் தாக்கல் செய்யாததால் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக ஹைகோர்ட் அறிவித்தது. குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் தஷ்வந்திற்கு கடந்த செப்டம்பர் மாதம் ஜாமீன் கிடைத்தது.

ஜாமீனுக்கு எதிர்ப்பு
இதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. 7 வயது சிறுமியை கொலை செய்த தஷ்வந்த்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால் ஹாசினியின் பெற்றோர் வேதனை அடைந்தனர். பல்வேறு அரசியல் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் குன்றத்தூரில் பெற்றோருடன் வசித்து வந்த தஷ்வந்த் போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

தாய் கொலை
இந்நிலையில் நேற்று தனது தாய் சரளாவிடம் (42) பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். சரளா பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த தஷ்வந்த் அங்கிருந்த இரும்புக் கம்பியை எடுத்து சரளாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து தஷ்வந்த், சரளா அணிந்திருந்த 25 பவுன் நகைகளை கொள்ளையடித்து கொண்டு தப்பிவிட்டார்.

தனிப்படை அமைப்பு
இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள தஷ்வந்த்தை தேடி வருகின்றனர். இதற்காக இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications