நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே இளைஞர் ஓட ஓட விரட்டி குத்திக் கொலை
சுவாதி கொலை செய்யப்பட்ட நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே ஐடிஐ மாணவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
கொலை செய்யப்பட்ட மாணவனின் பெயர் ரஞ்சித் என்பதாகவும். இவர் சென்னை நுங்கம்பாக்கம் அபு தெருவில் வசித்து வந்த ரமேஷ் என்பவரின் மகனாவார்.
கிண்டியில் உள்ள தொழில் நுட்பக் கல்லூரியில் ரஞ்சித் ஐடிஐ படித்து வந்தார். நேற்று தனது நண்பரின் அக்கா குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்குச் சென்று வருவதாகக் கூறி நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
இரவு 11.45 மணி அளவில் கடைசியாக தனது தாயார் சரஸ்வதியிடம் தான் பீச் ரயில் நிலயத்திலிருந்து வீட்டுக்கு திரும்ப வந்து கொண்டு இருப்பதாக பேசினாராம். ஆனால் ரஞ்சித்தின் சடலத்தை மட்டுமே பார்க்க முடிந்தது.
குத்திக்கொலை
கொலை செய்யப்பட்ட மாணவர் ரஞ்சித்தின் கழுத்துப்பகுதியில் ஆழமான கத்திக்குத்து காயம் உள்ளது. கைப்பற்றப்பட்ட ரஞ்சித்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டது. கொல்லப்பட்ட மாணவர் ரஞ்சித்தின் தந்தை இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் மரணமடைந்துள்ளார். குடும்பத்தின் ஒரே ஆதரவான மகனையும் பறிகொடுத்துவிட்டு தாயார் சரஸ்வதி மகனின் உடலைப் பார்த்து கதறி அழுதது காவல்துறையினரையே கண்கலங்க வைத்தது.
ரத்தம் தெறிக்க கொலை
லயோலா வளாகத்திற்கு எதிரே உள்ள குளக்கரை சாலை 2வது தெரு முதல் ஷெனாய் சாலை சந்திப்பில் ரஞ்சித் இறந்து கிடக்கும் இடம் வரை ரத்தம் சிதறி இருப்பதைப் பார்த்த போலீசார் அருகிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.
தப்பி ஓடிய ரஞ்சித்
நுங்கம்பாக்கம், ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கி நடந்து வந்த ரஞ்சித்தை லயோலா கல்லூரியில் இருந்து வள்ளுவர் கோட்டம் செல்லும் குளக்கரை சாலையில் மடக்கி கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்து ஓடிய ரஞ்சித் குளக்கரை சாலை -ஷெனாய் சாலை சந்திப்பில் விழுந்து இறந்து போனார்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையம்
குளக்கரை சாலையிலிருந்து விரட்டி விரட்டி குத்திக் கொல்லப்பட்டுள்ளார் ரஞ்சித். ரஞ்சித் ஓடும் காட்சிகளும் கொலையாளிகள் விரட்டும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. மிகவும் கொடூரமாக செய்யப்பட்ட இந்தக் கொலைக்கு முன் விரோதம் காரணமாக இருக்குமா அல்லது காதல் விவகாரமா என நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி வெட்டிக்கொல்லப்பட்ட பரபரப்பு சம்பவம் போல இந்த கொலை சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.