வறட்சி சோகத்தில் விவசாயிகள்.. பொங்கலை தித்திக்க செய்ய நீங்கள் ரெடியா?
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை, கோவை உள்ளிட்ட நகர்ப்புறங்களிலும் இளைஞர்கள் போராட்ட களத்தில் களமிறங்கியுள்ளனர்.
அதேநேரம், மாநிலம் முழுக்க வறட்சியால் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்த நிலையில், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு தொடர்பான புரிதல் அவர்களை விவசாயிகள் மீதான பரிவுக்கு அழைத்துச் சென்றுள்ளது. லயோலா கல்லூரி மாணவர்கள் இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக மனித சங்கிலி நடத்தியுள்ளனர். ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களால் விவசாயிகள் படும் துன்பம் மறைக்கப்படுகிறது அல்லது மறக்கப்படுகிறது என்ற சில விமர்சனங்களுக்கு பதிலடி தருவதை போல இருந்தது லயோலா மாணவர்கள் போராட்டம்.
அறுவடை காலம் முடிந்துவிட்ட நிலையில் இப்போது அரசு செய்ய வேண்டியது நிதி உதவி என்றால், சமூகத்தின் பிற அங்கத்தினர் செய்ய வேண்டியது தார்மீக உதவி.
விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க நாங்கள் இருக்கிறோம், உங்கள் கஷ்டம் எங்களுக்கு புரிகிறது என்ற ஆறுதல் வரிகள் அந்த அப்பாவி ஜீவன்களுக்கு தற்போதைய அவசர தேவை. ஏனெனில் தற்கொலை செய்த விவசாயியைவிட மனதால் வெம்பி இதய துடிப்பு நின்று போன உழவர்கள்தான் அதிகம். அவர்கள் மனதுக்கு தேவை ஆறுதல். அதை சக பங்காளிகளான சமூகத்தின் பிற மக்கள் தர வேண்டும்.
இதில் இளைஞர்கள் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும். சென்னை வெள்ளத்தின்போதும் இயற்கை சீற்றங்களின்போதும் காட்டிய பரந்த மனப்பான்மையை இளைஞர்கள் இப்போதும் கையில் எடுக்க வேண்டும். சோஷியல் மீடியாவில் மூழ்கி கிடக்காமல் கிராமங்களை நோக்கி ஓட வேண்டும். ஏழை விவசாயிகளுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.
விவசாயிகளுடன் சேர்ந்து பொங்கல் பண்டிகை கொண்டாடி அவர்களின் உள்ளத்தை தேற்றலாம். ஊட்டிக்கும், கொடைக்கானலுக்கும் பிற மாநிலங்களுக்கும் சுற்றுலா செல்லும் நண்பர் கூட்டம், தங்கள் தாய் மடியான கிராமங்களை நோக்கி ஓடலாம். திரும்பி வரும்போது மனதும், இதயமும் நிறைந்திருக்கும்.












Click it and Unblock the Notifications