பதைபதைக்க வைத்த சென்னை அண்ணா சாலை பள்ளம்... குவிந்த இளைஞர்களின் கேவலமான செல்பி மோகம்!
சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்தும் காரும் சிக்கியதைக் காண ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர்.
சென்னை: அண்ணா சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்தும் காரும் சிக்கியதைக் காண ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். ஆபத்தை உணராமல் விபத்தில் சிக்கிய பேருந்து மற்றும் காருடன் சேர்ந்து செல்பி எடுக்கத்தால் அவர்கள் ஆர்வம் காட்டினர்.
மெட்ரோ சுரங்கப்பாதை பணிகள் நடைபெறும் சென்னை அண்ணாசாலையில் இன்று பிற்பகல் திடீரென பெரும் பள்ளம் ஏற்பட்டது. இதில் மாநகர பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் சிக்சிக்கொண்டது.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நடு ரோட்டில் பள்ளத்துக்குள் விழுந்த பேருந்து மற்றும் காரை மீட்கும் பணிகள் துரிதமாக்கப்பட்டன.
திடீரென பேருந்தும் காரும் பள்ளத்தில் சிக்கியதால் அந்த வழியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணாசாலையில் அடிக்கடி பள்ளம் ஏற்படுவது வழக்கம் என்றாலும் இன்று உருவான பள்ளம் பெரியது என்பதால் அதனைக் காண மக்கள் திரண்டனர்.
தங்களின் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு பள்ளத்தை காண ஓடிவந்தனர் பொதுமக்கள். இதையடுத்து பள்ளத்தை சுற்றிலும் தடுப்பு அமைக்கப்பட்டது.
இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான இளைஞர்கள் அங்கு திரண்டனர். அப்பகுதியில் அடுத்த பள்ளம் ஏற்படலாம் என்ற ஆபத்து இருந்த போதும் அதைபற்றியெல்லாம் கவலைப்படாமல் பள்ளத்தையும் பள்ளத்தில் சிக்கிய கார் மற்றும் பேருந்துடன் சேர்ந்து செல்பி எடுப்பதிலேயே குறியாக இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.