காலையிலேயே ஷாக்.. தஞ்சை அருகே தடுப்பு சுவரில் மோதி நொறுங்கிய வேன்.. 4 பேர் பலி.. என்ன நடந்தது?
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை சாலை தடுப்பு சுவரில் வேன் மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சேதுபாவாசத்திரம் அருகே இன்று அதிகாலையில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேன் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது.

இதில் வேன் அப்பளம்போல் நொறுங்கியது. இதனால் வேனில் பயணித்தவர்கள் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
அப்போது வேனில் பயணித்த 3 பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. மேலும் 7 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடுவது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 7 பேரும் மீட்கப்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
அதன்பிறகு அவர்கள் 7 பேரும் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இறந்த 4 பேரின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது விபத்தில் சிக்கியவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் தூத்துக்குடியில் இருந்து வேளாங்கண்ணிக்கு வேனில் சென்றதும், அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தடுப்பு சுவரில் மோதி விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.
அதோடு வேனில் மொத்தம் 11 பேர் பயணம் செய்ததும், இதில் பாக்கியராஜ், ஞானம்மாள், ராணி, சின்னம்மாள் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications