எடப்பாடியை விடுங்க.. ஓபிஎஸ்- சசிகலா- டிடிவி தினகரன் சீக்கிரம் சேருவாங்க.. பிளானை சொன்ன சையது கான்
தஞ்சாவூர்: ஓ.பி.எஸ். ஆதரவாளரும், தேனி மாவட்டச் செயலாளருமான சையது கான் டிடிவி தினகரனைச் சந்தித்த பின்னர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பல திருப்பங்கள் அரங்கேறின. முதலில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வானார்.
அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் இரு தரப்பும் மாறி மாறி ஆதரவாளர்கள் நீக்கினர்.

அதிமுக
இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளித்து இருந்தார். இதையடுத்து தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு அளித்தது. இந்த முறை தீர்ப்பு எடப்பாடி தரப்புக்கு ஆதரவாக வந்து இருந்தது.

ஓபிஎஸ்
அதில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை ஐகோர்ட், கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் எனத் தனது தீர்ப்பில் தெரிவித்து இருந்தார். இது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதேநேரம் ஓபிஎஸ் தரப்பில் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

மேல்முறையீடு
வரும் திங்கள்கிழமை ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் உடனும் ஓபிஎஸ் நெருக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, அவர்களுக்கு ஓபிஎஸ் வெளிப்படையாகவே அழைப்பு விடுத்து இருந்தார். எடப்பாடியை எதிர்கொள்ள சசிகலா மற்றும் டிடிவி தினகரன் உடன் மீண்டும் கைகோர்க்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

டிடிவி தினகரன் உடன் சந்திப்பு
இந்தச் சூழலில் உணவு ஒவ்வாமையால் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை ஓ.பி.எஸ். ஆதரவாளரும், தேனி மாவட்டச் செயலாளருமான சையது கான் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

ஓபிஎஸ் தான் தலைவர்
செய்தியாளர்களிடம் பேசிய சையது கான், "டிடிவி தினகரன் எனக்கு தலைவர், நண்பர், சகோதரர். அவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்காக இங்கு வருகை தந்தேன். அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. எத்தனை தீர்ப்பு வந்தாலும் அதிமுகவிற்கு ஓபிஎஸ் தான் தலைவர்.

இணைவார்கள்
அதிமுகவில் பிளவு பட்டுள்ள அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம். எடப்பாடி பழனிசாமி பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஓபிஎஸ் டிடிவி தினகரன் சசிகலா ஆகிய மூவரும் ஒன்றாக இணைவது தான் எங்களுடைய விருப்பம்" என்றார். அதிமுகவில் எடப்பாடி தலைமையில் ஒரு அணி உருவாகி உள்ள நிலையில், அவரை எதிர்க்கும் வகையில் ஓபிஎஸ் டிடிவி தினகரன் சசிகலா ஒரே அணியில் வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications