புயலை வைத்து அரசியல் செய்கிறார் ஸ்டாலின்.. ஓ.பன்னீர்செல்வம் பாய்ச்சல்
தஞ்சை: கஜா புயல் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
கஜா புயலால் உயிரிழந்த 11 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் வீதம் ரூ. 1 கோடியே 10 லட்சம் நிவாரண உதவித் தொகையினை தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது, "கஜா புயல் ஆறு மாவட்டத்தில் பலத்த சேதமும், ஆறு மாவட்டத்தில் மிதமான பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 2004 சுனாமி, அதன் பிறகு தானே, வர்தா, ஒக்கி புயல்கள், வெள்ளம் என தொடர்ந்து வந்த இயற்கை பேரிடர்களை எதிர் கொண்டு, இவற்றின் சுவடே இல்லாத வகையில் மாற்றினோம்.

முதல்வராக ஜெயலலிதா இருக்கும் போது எப்படி பணியாற்றிவோமோ அதே போல தான் கஜா புயல் பாதிப்புகளை அகற்ற, தற்போதும் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். தஞ்சை மாவட்டத்தில், 2,437 குடும்பங்களை சேர்ந்த, 10 ஆயிரத்து 592 பேர் 55 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 2,170 கி.மீ., சாலைகளில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு உள்ளன. சாலை போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில், 4 ஆயிரத்து 458 மின்வாரிய ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மாநகரப்பகுதியில், 100 சதவீதமும், கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சிகளில், 83 சதவீதமும், 22 பேரூராட்சிகளில், 96 சதவீதமும், மீதமுள்ள கிராமப் பகுதிகளில், 61 சதவீத மின் விநியோகம் வழங்கப்படுகிறது.
இரண்டு, மூன்று நாட்களுக்குள் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும்.கஜா புயலால் தஞ்சை மாவட்டத்தில், 16 பேர் உயிரிழந்துள்ளனர். 1,834 கால்நடைகள், 1 லட்சத்து 58 ஆயிரத்து 488 கோழிகள் உயிரிழந்துள்ளன.71 ஆயிரத்து 877 குடிசை வீடுகள், 50 ஆயிரத்து 74 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 14 ஆயிரத்து 856 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்து உள்ளன. 127 விசைப்படகுகள், 50 நாட்டுப் படகுகள் முழுமையாகவும், 119 விசைப்படகுகள், 782 நாட்டுப்படகுகள் பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளன.
புயலை வைத்து அரசியல் செய்கிறார் ஸ்டாலின். வெறும் வாயால் பேசினால் மட்டுமே போதாது. செயல்பட வேண்டும். தாங்கள் தான் களத்தில், கடமை, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறோம். அனைவருக்கும் உணவளித்து வருகிறோம். தஞ்சை மாவட்டம் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் ஒருவேளை சாப்பாட்டுக்கு வழியில்லை என்ற நிலையே இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications