வாரிசுக்கு 'சீட்' மறுப்பு.. திசைத் திரும்பும் காற்று.. தட்டித் தூக்க தயாராகும் திமுக!
தஞ்சை: சட்டமன்ற தேர்தலில் பாபநாசம் தொகுதியின் நிலவரம் குறித்து இங்கே பார்க்கலாம்.
டெல்டா மாவட்டமான தஞ்சையின் பாபநாசம் சட்டமன்ற தொகுதி சற்றே வித்தியாசமான தொகுதி எனலாம். டெல்டாவைப் பொறுத்தவரை ஜாதி ஓட்டுகள் தான் அதிகம் பேசும்.
பெரும்பாலும் ஜாதி அடிப்படையில் டெல்டா பெல்ட்டில் வேட்பாளர்கள் நிறுத்தப்படும் சூழலில், பாபநாசம் அதற்கு அப்பாற்பட்ட ஒன்றாக விளங்கி வருகிறது.

மூப்பனார் மாஸ்
ஆம்! இங்கு ஜாதி ஓட்டுக்களை வைத்து எந்த கட்சியும் ஜெயிக்க முடியாது. இரட்டை இலை, உதயசூரியன் ஆகிய இரண்டு சின்னங்களுக்கு மட்டும் தான் இங்கு வேல்யூ. யாராக இருந்தாலும், எந்த ஜாதிக்காரராக இருந்தாலும், இவ்விரு சின்னங்களுக்கு ஓட்டு விழும். காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸுக்கு இங்கு செல்வாக்கு இருந்தாலும், அவர்கள் ஜாதி அடிப்படையில் இங்கு வென்றவர்கள் அல்ல. தஞ்சை மண்ணைச் சேர்ந்த ஜி.கே. மூப்பனார் எனும் பெயருக்கு தான் அங்கு ஓட்டு. இப்படியாக ஜாதி கடந்து, தலைவர்களின் ஃபேஸ் வேல்யூவுக்கு முக்கியத்தும் கொடுக்கும் தொகுதி இது.

ஜவாஹிருல்லா
கடந்த 2011 மற்றும் 2016ல் அதிமுக சார்பாக மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு போட்டியிட்டு இங்கு வென்றார். கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த துரைக்கண்ணுவுக்கு பாபநாசத்தில் செல்வாக்கு இருந்தது. ஆனால், அவர் காலமாகிவிட்டதால், திமுக இப்போது தைரியமாக, இங்கு இதுவரை போட்டியிடாத மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லாவை களம் இறக்கியுள்ளது. அதுவும் புத்திசாலித்தனமாக உதயசூரியன் சின்னத்தில்.

சீட் மறுப்பு
எனினும், துரைக்கண்ணுவின் மகனான 'ஐயப்பன்' என்கிற சண்முக பிரபு, பாபநாசத்தில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவருக்கு சீட் கிடைக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் வைத்திலிங்கம் தரப்பு என்று கூறப்படுகிறது.

ரங்கசாமி
தற்போது இந்த சூழலை தங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டி, ஓரளவு முஸ்லீம்கள் உள்ள பாபநாசம் தொகுதியை மநேம கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. அதேசமயம, அமமுக சார்பில் அதே கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. எம். ரங்கசாமி களமிறக்கப்பட்டுள்ளார்.

திமுக அலை
நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை, கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரமே செய்யாமல் பாபநாசம் டவுனில் மட்டும் 500க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றது. ஆகையால், இம்முறை ஏகப்பட்ட திட்டம், வியூகம் என்று கிருட்டிணகுமார் என்பவரை களமிறங்கியுள்ளார் சீமான். எனினும், துரைக்கண்ணு இல்லாத பாபநாசத்தை திமுக கூட்டணி கைப்பற்றவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications