பாஜக கவுன்சிலருக்கு கேக் ஊட்டிய திமுக மேயர்.. “கூட்டணிக்கு அச்சாரம்?”.. துணை மேயர் ‘தெறி’ ரிப்ளை!
தஞ்சாவூர் : திமுக - பாஜக இரு கட்சிகளும் அரசியல் அரங்கில் வைரிகளாக முஷ்டி முறுக்கி வரும் சூழலில், தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டத்தில் திமுக மேயர் - பாஜக கவுன்சிலருக்கு கேக் ஊட்டி நெகிழ வைத்துள்ளார். அப்போது கவுன்சில ஒருவர் அடித்த கமெண்ட்டும், துணை மேயர் கொடுத்த ரிப்ளையும் தான் டாப்.
தஞ்சாவூர் மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, அமமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இன்று மாமன்ற கூட்டம் நடைபெறும்போது 31வது வார்டு மாமன்ற உறுப்பினரான பாஜகவைச் சேர்ந்த ஜெய் சதீஷுக்கு இன்று பிறந்த நாள் என்பதை அறிந்த மேயர் சண்.ராமநாதன், உடனடியாக பணியாளர்கள் மூலம் கேக் வாங்கிர் வரச் செய்து பாஜக மாமன்ற உறுப்பினர் ஜெய் சதீஷ் மற்றும் மற்ற உறுப்பினர்களையும் மேடைக்கு அழைத்து, ஜெய் சதீஷை கேக் வெட்டச் செய்து கேக் ஊட்டி கொண்டாடினார்.
பாஜக கவுன்சிலர் ஜெய் சதீஷுக்கு மேயர், துணை மேயர், அனைத்து கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள், மாநகராட்சி பணியாளர்கள் என அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடி பிறந்தநாள் வாழ்த்து கூறினர். ஜெய் சதீஷும் மேயர் சண் ராமநாதன், ஆணையர் சரவணக்குமார் உள்ளிட்டோருக்கு கேக் ஊட்டினார்.
அப்போது கவுன்சிலர் ஒருவர், திமுக மேயர் பாஜக கவுன்சிலருக்கு கேக் ஊட்டுவது கூட்டணிக்கு அச்சாரம் போடுவது போல இருக்கிறது என கமெண்ட் அடிக்க, அதற்கு திமுகவைச் சேர்ந்த தஞ்சாவூர் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, "நல்ல கதை.. அவரை எங்க கட்சிக்கு அழைத்து வருகிறார்" என ரிப்ளை கொடுத்தார். இதையடுத்து, கவுன்சிலர்கள் வெடித்துச் சிரித்தனர்.

திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் பாஜக கவுன்சிலர் ஜெய் சதீஷுக்கு கேக் ஊட்டி பிறந்தநாளை கொண்டாடினர். பாஜக கவுன்சிலருக்கு கேக் ஊட்டி விட்டு பிறந்தநாளை கொண்டாடிய திமுக மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மாமன்ற கூட்டத்தில் அனைவரும் ஒரே குடும்பம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அரசியல் களத்தில் திமுக - பாஜக எதிரிகளாகச் செயல்பட்டாலும், மாமன்றக் கூட்டத்தில், பாஜக உறுப்பினருக்கு திமுக மற்றும் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்தது தஞ்சாவூர் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications