சனாதன பொங்கல் விழாவில் திமுக MLA! இந்து மக்கள் கட்சியுடன் கரம் கோர்ப்பு! உடன்பிறப்புகள் உஷ்ணம்!
தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற சனாதன பொங்கல் விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் பங்கேற்றது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனாதன கொள்கைக்கு நேர் எதிர் கொள்கையை கொண்ட இயக்கம் திமுக என்பது ஒரு பக்கம் இருப்பினும், திமுகவை மிக மிக கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வரும் அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி நடத்தும் விழாவுக்கு செல்வதா என திமுக எம்.எல்.ஏ. சாக்கோட்டை அன்பழகனுக்கு எதிராக சொந்தக்கட்சியினரே போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

சனாதனத்தை எதிர்த்தும், விமர்சித்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா, உள்ளிட்ட திமுக முக்கிய பிரமுகர்கள் பேசி வரும் நிலையில் சனாதனத்தை ஆதரிக்கும் வகையிலும், ஏற்றுக்கொள்ளும் வகையில் சனாதன பொங்கல் விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் கலந்து கொண்டிருக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலினையும், திமுகவையும் மிக கடுமையாக அர்ஜுன் சம்பத் விமர்சித்து வரும் நிலையில் அவரது கட்சி விடுத்த அழைப்பை ஏற்று அறிவாலயத்துக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் சாக்கோட்டை அன்பழகன்.
சாக்கோட்டை அன்பழகனை பொறுத்தவரை தஞ்சை மாவட்ட திமுகவில் மிகவும் சீனியர் நிர்வாகியாக இருக்கக் கூடியவர். அவருக்கு தெரியாத அரசியல் அல்ல. ஆனால் அப்படியிருந்தும் அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி விடுத்த அழைப்பை ஏற்று அவர் சனாதன பொங்கல் விழாவில் கலந்து கொண்டிருக்கிறார் என்றால் அதற்கு ஏதேனும் உள் காரணங்கள் இருக்கக் கூடுமோ எனப் பேசப்படுகிறது.
கட்சியும், கட்சித் தலைமையும் ஒரு நிலைப்பாட்டில் இருக்கின்ற போது அந்த நிலைப்பாட்டுகு நேர் எதிராக கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் செயல்பட்டிருப்பதால் இந்த விவகாரம் அறிவாலயம் வரை அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இதனிடையே இந்து மக்கள் கட்சி நடத்திய சனாதன பொங்கல் விழாவில் தாம் பங்கேற்ற புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் சாக்கோட்டை அன்பழகன் பதிவேற்றம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications