பாபநாசம் தொகுதி மக்களின் பாசப்பிள்ளை துரைக்கண்ணு... அரசுப் பணியை உதறி அரசியலுக்கு வந்த கதை..!
தஞ்சாவூர்: வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணம் பாபநாசம் தொகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் அளித்துள்ளது.
பாபநாசம் முழுவதும் பச்சைப்பிள்ளை போல் அனைவரிடத்திலும் பழகி வந்த இவர், அந்த தொகுதி மக்களால் தொடர்ச்சியாக 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சொந்த தொகுதியான பாபநாசத்தில் அரசியல் பேதங்களை கடந்து அனைத்துக் கட்சியினரிடமும் அனுசரணையாக நடந்துகொண்டவர் துரைக்கண்ணு.

அரசியல் வருகை
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ராஜகிரியை சேர்ந்தவர் துரைக்கண்ணு. கூட்டுறவு சொசைட்டியில் தனக்கு கிடைத்த வேலையை உதறிவிட்டு எம்.ஜி.ஆர். மீது கொண்ட பற்று காரணமாக அதிமுகவில் இணைந்து செயலாற்றத் தொடங்கினார். இதற்கு குடும்பத்தில் கடும் எதிர்ப்பு இருந்தபோதும் தனது முடிவில் திடமாக இருந்தார் அவர். கட்சியில் எந்தப் பொறுப்பும் இல்லாமல் பணியாற்றி வந்த துரைக்கண்ணுவை ஒன்றியச் செயலாளர் ஆக்கினார் ஜெயலலிதா.

ஒன்றியச் செயலாளர்
தொடர்ந்து 23 ஆண்டுகாலம் ஜெயலலிதாவின் நன் மதிப்பை பெற்று ஒன்றியச் செயலாளராக இருந்த துரைக்கண்ணுவுக்கு அவரது 58-வது வயதில் பாபநாசம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2006-ம் ஆண்டு முதல்முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட துரைக்கண்ணு அடுத்தடுத்து 2011 மற்றும் 2016 தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வெற்றிபெற்று ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்தார்.

அன்புக் காட்டுவார்
இதையடுத்து 2016-ம் ஆண்டு அமைக்கப்பட்ட அமைச்சரவையில் மிக முக்கியத் துறையான வேளாண்மைத் துறையை துரைக்கண்ணு வசம் ஒப்படைத்தார் ஜெயலலிதா. அமைச்சராக இருந்தாலும் ஒன்றியச்செயலாளராக இருந்த போது மக்களிடமும், கட்சிக்காரர்களிடம் எப்படிப் பழகினாரோ அதே போல் தனது இறுதிமூச்சு வரை அனைவரிடத்திலும் அன்புக் காட்டி வந்தார்.

குறைகூற மாட்டார்
துரைக்கண்ணு மீது ஜெயலலிதாவும் நன்கு மரியாதை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. காரணம், ஜெ.வை சந்தித்த போதெல்லாம் கட்சி வளர்சிப்பணிகள் குறித்து மட்டும் பேசுவாரே தவிர பிறரை பற்றி குறைக்கூறி பேசமாட்டார். இதனை ஜெயலலிதாவின் குட்புக்கில் தொடர்ச்சியாக 23 ஆண்டு காலத்திற்கும் மேல் இடம்பெற்றிருந்தார் துரைக்கண்ணு.

4 மகள்; 2 மகள்;
அமைச்சர் துரைக்கண்ணு ஊரில் இருந்தால் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சென்று அவரை சந்திக்கலாம். அமைச்சர் தூங்குகிறார், ஓய்வில் இருக்கிறார் என்ற பேச்சுக்கே அங்கு இடமிருக்காது எனக் கூறுகிறார் கும்பகோணத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர். இதனிடையே அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு 4 மகள்கள் 2 மகன்கள் என 6 பிள்ளைகள் உள்ளனர். மகன்களில் ஒருவர் அரசியலிலும் மற்றொருவர் அரசு அதிகாரியாகவும் இருக்கிறார்.












Click it and Unblock the Notifications