“பைத்தியம்”.. வார்த்தையை விட்ட வைத்திலிங்கம்.. நான் நினைச்சிருந்தா அன்னிக்கே.. கடுமையாக அட்டாக்!
பதவிக்கு வந்தவுடன் பைத்தியம் போல நடந்துகொண்டு வருகிறார் என கடுமையாக விமர்சித்துள்ளார் வைத்திலிங்கம்.
தஞ்சாவூர் : நான் நினைத்திருந்தால் அன்றைக்கு எடப்பாடி பழனிசாமி முதல்வராகவே ஆகி இருக்க முடியாது. அதிமுக பொதுச்செயலாளராக நிச்சயமாக எடப்பாடி பழனிசாமி வரவே முடியாது என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தலை ஈபிஎஸ் தரப்பு அறிவித்துள்ள நிலையில், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது ஓபிஎஸ் அணி.
எடப்பாடி பழனிசாமி கையில் கட்சி போனால் ஜாதிக் கட்சியாக மாறிவிடும் என வைத்தியலிங்கம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தேர்தல்
அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் நேற்று முதல் பெறப்பட்டு வருகின்றன. எடப்பாடி பழனிசாமி நேற்று தனது விருப்ப மனுவை தாக்கல் செய்தார். இந்த தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஓபிஎஸ் அணியினர்
எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக பொறுப்பேற்க முடியாது என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். நீதிமன்றமோ, தேர்தல் ஆணையமோ எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராகவே அங்கீகரிக்கவில்லை, எனவே இந்த தேர்தல் செல்லாது எனக் கூறி வருகின்றனர். தஞ்சாவூாில் ஓ.பன்னீர்செல்வம் அணியினாின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு விலக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வைத்திலிங்கம்
பின்னர் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த வைத்திலிங்கம் பேசுகையில், "அதிமுக பொதுக்குழு தொடர்பாக நீதிமன்றத்தில் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம். நியாயம் எங்கள் பக்கம் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்கவில்லை. இன்றுவரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து வருகிறார். டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோரை ஒன்றிணைத்து அதிமுகவை பலப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். அது விரைவில் நடைபெறும்.

பைத்தியம் போல
அதிமுக பொதுச்செயலாளராக நிச்சயமாக எடப்பாடி பழனிசாமி வரவே முடியாது. பொதுச்செயலாளர் தேர்வு என்பது முறைப்படி அறிவிக்க வேண்டும். ஆனால், முறைப்படி எதுவும் நடைபெறவில்லை. எடப்பாடி பழனிசாமி கையில் அதிமுக சென்றால், ஜாதிக் கட்சியாக மாறிவிடும். வாக்குப்பெட்டி வைத்து பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தி வெற்றி பெற வேண்டும். தரையில் தவிழ்ந்து பதவி பெற்ற எடப்பாடி பழனிசாமி, நன்றி விசுவாசம் இல்லாமல் பதவிக்கு வந்தவுடன் பைத்தியம் பிடித்த கிறுக்கன் போல நடந்துகொண்டு இருக்கிறார். அவரை முதலமைச்சராக்கியவரையே சிறையில் இருந்து வரக்கூடாது என நினைத்த அற்ப புத்தி கொண்டவர் எடப்பாடி பழனிசாமி.

நான் நினைத்திருந்தால்
நான் நினைத்திருந்தால் அன்றைக்கு எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆகி இருக்க முடியாது. திமுகவால் தான் புறக்கணிக்கப்பட்ட போது எம்ஜிஆர், அதிமுகவை தொடங்கி தொண்டர்களால் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டு, தொண்டன் ஒருவர் தலைவனாக வர வேண்டும் என்று சட்டவிதியை கொண்டு வந்தார். அந்த சட்டவிதியை யாராலும் மாற்ற முடியாது. அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என கூறியிருக்கிறார். அவர் ஒரு மாநில தலைவர் தான். முடிவெடுக்க வேண்டியது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தான்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications