கஜாவால் சின்னாபின்னமான வீடு.. இருக்க இடமில்லாமல் மாட்டு வண்டியில் படுத்து உறங்கும் அவலம்
தஞ்சாவூர்: கஜா புயலால் வீடுகளை இழந்தவர்கள் மாட்டி வண்டியில் படுத்து உறங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கஜா புயல் தென் மாவட்டங்களை ஒரு புரட்டு புரட்டி விட்டது. கரையை கடந்த போது 110 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றால் வீடுகளின் கூரைகள் அடித்து செல்லப்பட்டு சுவர்கள் இடிந்து விழுந்தன.
இதனால் மக்கள் இருக்க இடம் கூட இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
கோயில்கள்
குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில்தான் ஏராளமான மக்கள் வீடுகளை இழந்துவிட்டனர். இவர்களில் பெரும்பாலும் உணவுக்காக அங்கும் இங்கும் தேடி இரவு நேரங்களில் கோயில்கள், பள்ளிகளில் தங்குகின்றனர்.
ஆரம்பம்
இன்னும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு வீடுகள் எப்போது கட்டி கொடுக்கப்படும் என தெரியவில்லை. இன்னும் ஜனவரி மாதம் வரை மழை இருக்கிறது என கூறுகிறார்கள். இதனால் வீடுகள் இல்லாமல் என்ன செய்வது என மக்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.
படுத்து உறங்குதல்
இந்நிலையில் தற்சமயத்துக்கு மாட்டு வண்டிகளில் கொசு வலையை கட்டி உறங்குகிறார்கள். இந்த மாட்டு வண்டியிலும் ஒருவர்தான் படுக்க முடியும். மீதமுள்ளவர்கள் வெட்ட வெளியில் படுத்து உறங்குகிறார்கள்.
புனரமைப்பு
தற்போது பனி அதிகமாக பொழிவதால் வெளியே படுக்கும் மக்களுக்கு காய்ச்சல், இருமல், சளி ஆகியவை ஏற்படுகிறது. இதனால் நிவாரணத் தொகையை கொடுத்துவிட்டால் வீட்டை புனரமைப்பு செய்து கொள்ளலாம் என மக்கள் கூறுகின்றனர்.