டெல்டா "டெரர்”.. அக்யுஸ்ட் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு! ரவுடி பூவனூர் ராஜ்குமார் கொலை வழக்கில் பரபர
இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர் நடேச தமிழார்வன் தலையை துண்டித்து கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்தவர் வளரும் தமிழகம் கட்சியை சேர்ந்த ரவுடி பூவனூர் ராஜ்குமார்.
தஞ்சாவூர்: பூவனூர் ராஜ்குமார் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரவீன் என்ற நபரை போலீசார் சுட்டுப்பிடித்து கைது செய்து இருக்கின்றனர். அதிராம்பட்டினத்தை அடுத்து உள்ள மல்லிப்பட்டினம் பகுதியில் எஸ்ஐயை வெட்டிவிட்டு தப்பிச்செல்ல முயன்றபோது போலீசார் அவரை சுட்டுப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளராக இருந்தவர் நடேச தமிழார்வன். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்தவர் வளரும் தமிழகம் கட்சியை சேர்ந்த பூவனூர் ராஜ்குமார். தமிழ்நாடு முழுவதும் இவர் மீது 20 க்கும் அதிகமான கொலை, கடத்தல் வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்தின் கீழ் கடந்த ஒராண்டாக சிறையில் இருந்து இருக்கிறார்.

கொல்லப்பட்ட ராஜ்குமார்
சமீபத்தில் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் தான் கடந்த 10 ஆம் தேதி பூவனூர் ராஜ்குமார் திருவாரூர் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டு திருவாரூர் - மன்னார்குடி சாலையில் சென்றுகொண்டு இருந்து உள்ளார். அப்போது அவர் செல்லும் வழியிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

பழிக்குப் பழி
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பூவனூர் ராஜ்குமார், நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வனின் கொலைக்கு பழி தீர்ப்பதற்காக நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. அதன் அடிப்படையில் காவல்துறையும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வந்தது.

போராட்டம்
இதற்கிடையே பூவனூர் ராஜ்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு அவரது வீட்டிற்கு அருகே அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் - திருவாரூர் சாலையில் பூவனூர் ராஜ்குமாரின் வளரும் தமிழகம் கட்சியை சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கைது நடவடிக்கை
அதை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வளரும் தமிழகம் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த ஆண்டு கொல்லப்பட்ட இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் நடேச தமிழார்வனின் மகன் ஸ்டாலின் பாரதி, அவரின் அண்ணன் மகன் வீரபாண்டியன் சூர்யாவை கைது செய்தனர்.

பிரவீன்
இவர்களுடன் மாதவன், அரசு என மொத்தம் 8 பேரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாகி இருக்கும் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இதில் முக்கியமான நபர் பிரவீன்.

எஸ்எஸ்ஐக்கு அரிவாள் வெட்டு
திருவாரூர் காவல் ஆய்வாளரை கொல்ல முயன்றதாக இவர் மீது வழக்கு உள்ளது. இந்த நிலையில் இவர் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே மல்லிப்பட்டினத்தில் தலைமறைவாகி இருந்ததாக தகவல் கிடைத்து அவரை போலீசார் பிடிக்க சென்றனர். அப்போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவனின் கையை அறிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றார் பிரவீன்.

துப்பாக்கியால் சுட்ட போலீஸ்
அப்போது காவல் ஆய்வாளர் ராஜேஷ் பிரவீனை துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். அரிவாளால் வெட்டப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவன் பட்டுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications