திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவிலில் பிரம்மஹத்தி தோஷ பரிகாரம் செய்து வழிபட்ட சசிகலா
திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலுக்கு சென்று சிறப்பு ஹோமம் செய்து வழிபட்ட சசிகலா ரேவதி நட்சத்திர லிங்கத்தை வழிபட்டுள்ளார்.
தஞ்சாவூர்: குலதெய்வ கோவிலில் காதுகுத்து விழாவில் பங்கேற்ற சசிகலா, திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்து சிறப்பு யாகத்தில் பங்கேற்றுள்ளார். பிரம்ஹத்தி தோஷ பரிகார தலமாக விளங்கும் மகாலிங்கசாமி கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானமும் குடைதானமும் கொடுத்துள்ளார் சசிகலா.
பிரம்மஹத்தி தோஷம் ஒருவருக்கு ஏன் ஏற்படுகிறது என்பது பற்றி புராணங்களில் சொல்லப்படுகிறது. பிராமணரை கொலை செய்தல், முன்பின் அறியாதவர்களுக்கு பணத்திற்காக துன்பம் விளைவித்தல், நல்ல குடும்பத்தை பொல்லாங்கு சொல்லி பிரித்தல், செய்வினை செய்தல், செய்வினை செய்பவர்களுக்கு துணை போகுதல் பிரம்மஹத்தி தோஷத்தை தரும். அதே போல திருமணத்திற்கு முன் உறவு கொண்டு பின் வேறு ஒருவரை திருமணம் செய்தல், திருமணத்திற்கு பின் வேறொரு பெண்ணை அல்லது ஆணை விரும்புதல், நம்பிக்கை துரோகம் செய்தல், ஒருவன் செய்யாத தவறை செய்தான் என சொல்லும் பொய் ஆகியவை பிரம்மஹத்தி தோஷமாகும்.
பிரம்மஹத்தி தோஷம் இருந்தால் ஒருவருக்கு திருமணத்தடை ஏற்படும். புத்தி சுவாதினம் ஏற்படுதல், நோய்களால் அவதிப்படுதல், செய்யாத குற்றத்திற்காக சிறை செல்லுதல், கணவன்-மனைவி பிரச்சினை, தொழிலில் பெரும் நஷ்டம், புத்திர பாக்கியத் தடை, புத்திர சோகம் முதலியன பிரம்மஹத்தி தோஷத்தாலேயே ஏற்படுகின்றன.

சசிகலாவின் யாகம்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கசாமி கோவில் பிரம்மஹத்தி தோஷ பரிகார தலமாகும். இங்கு சசிகலா வந்து யாகம் செய்து அன்னதானம் கொடுத்து வழிபட்டதுதான் பலரையும் யோசிக்க வைத்துள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா ஒருமாத கால அமைதிக்குப் பிறகு தற்போது ஆலய தரிசனத்திற்கு கிளம்பியுள்ளார். குல தெய்வ கோவிலுக்கு சென்று விட்டு திருவிடைமருதூரில் தரிசனம் செய்துள்ளார்.

ரேவதி நட்சத்திரம்
மகாலிங்க சுவாமி கோயில் 27 நட்சத்திர லிங்க சன்னதிகள் உள்ளன. முதலில் விநாயகரை வழிபட்ட சசிகலா, 27 நட்சத்திர லிங்க சன்னதிக்குள் சென்று ரேவதி நட்சத்திர லிங்கத்திற்கு சிறப்பு ஹோமத்துடன் பூஜை செய்து வழிபட்டார். தொடர்ந்து பிரகத் சுந்தர குஜாம்பாள் சன்னதிக்கு சென்று வழிபட்டார்.

தானம் கொடுத்த சசிகலா
மகாலிங்கேஸ்வரர் சுவாமி கோவில் சாமி தரிசனம் செய்ய வந்த சசிகலா அங்கே பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் குடைகளை தானமாக வழங்கினார். பின்னர் கோவிலை வலம் வந்த சசிகலாவின் காலில் அமமுக நிர்வாகிகள் விழுந்து வணங்கினர்.

அரசியல் ஓய்வு
அரசியலில் இருந்து விலகப்போவதாக கூறியுள்ள சசிகலா விரைவில் உங்களை எல்லாம் சந்திப்பேன் என்று அறிக்கை வெளியிட்டார். இப்போது சசிகலாவிற்கு நேரம் சரியில்லாமல் இருப்பதாகவும், தசாபுத்திகள் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் ஜோதிடர்கள் கூறியுள்ளதால் அரசியலில் தற்காலிக ஒய்வினை அறிவித்து விட்டு ஆன்மீக பயணம் கிளம்பிவிட்டார். அவர் பிரம்மஹத்தி தோஷ பரிகார தலத்தில் வழிபட்டதுதான் தற்போது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications