"ஏன் இப்படி பண்றீங்க".. தட்டி கேட்ட ஆசிரியரை தூக்கி போட்டு காலால் மிதித்த பிளஸ் 2 மாணவர்கள்
பள்ளி ஆசிரியரை மாணவர்கள் தாக்கியது அதிர்ச்சியை தந்துள்ளது
கும்பகோணம்: "ஏன்ப்பா இப்படி பண்றீங்க" என்று நடுரோட்டையே வழிமறித்து கொண்டு பிறந்த நாள் கேக் வெட்டிய மாணவர்களிடம் வாத்தியார் கேள்வி கேட்க.. அதற்கு அந்த வாத்தியாரையே அடித்து உதைத்து ஆஸ்பத்திரியில் படுக்க வைத்துவிட்டனர் மாணவர்கள்.. அதுவும் ஸ்கூல் படிக்கும் பிள்ளைகள்!
கும்பகோணத்தை அடுத்த ஆண்டலாம்பேட்டை மகாஜனக்குடியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். வயசு 35 ஆகிறது. இவர்தான் அந்த வாத்தியார்.
கும்பகோணம் நால்ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4 வருஷமாக ஆசிரியராக உள்ளார். 7-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவர்களுக்கு உயிரியல் பாடம் நடத்துபவர்.

பிறந்த நாள்
நேற்று முன்தினம், ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு கிளம்ப தயாரானார். அப்போது ஸ்கூலின் எதிரே, பிளஸ் டூ மாணவர்கள் கும்பலாக சூழ்ந்து கொண்டு நின்றிருந்தார்கள். ஒரு மாணவனுக்கு பிறந்த நாள் என்பதால் 10 பேர் நின்று கொண்டு, கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கத்தி கூச்சலிட்டு கொண்டும், வழியை மறித்து கொண்டும் நின்றிருந்தனர்.

ஆசிரியர்கள்
டிராபிக் ஜாம் ஆகும் அளவுக்கு நடுரோட்டில் இவர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர். இந்தவிஷயம் ஸ்கூல் ஹெச்.எம்-க்கு தெரியவந்ததும், கல்யாணசுந்தரம் உள்ளிட்ட 4 ஆசிரியர்களை அனுப்பி மாணவர்களை அங்கிருந்து நகர்ந்து செல்ல அறிவுறுத்துமாறு சொன்னார்கள்.

தாக்குதல்
இதனால் கல்யாண சுந்தரம், மற்ற 4 ஆசிரியர்கள் ரோட்டில் இருந்த மாணவர்களிடம், பொதுமக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று சொன்னார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள், கல்யாணசுந்தரத்தை சரமாரியாக தாக்கினார்கள். இப்படி ஒரு தாக்குதலை கல்யாண சுந்தரம் எதிர்பார்க்கவே இல்லை. முகம், உடம்பு என்று ஒரு இடம் விடாமல் தாக்கியதுடன், அவரை கீழே தள்ளி காலாலும் மிதித்தனர்.

விசாரணை
இதை பார்த்த மற்ற ஆசிரியர்கள் அதிர்ச்சியடைய, அந்த பக்கம் தற்செயலாக சென்று கொண்டிருந்த போலீஸ்காரர் இதை பார்த்து மாணவர்களை அங்கிருந்து விரட்டினார். ஆனால் கல்யாணசுந்தரத்துக்கு உடம்பு, முகம் வீங்கிபோய் வலியால் அலறினார். உடனடியாக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இது சம்பந்தமாக கும்பகோணம் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியரை, இப்படி பள்ளி மாணவர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரிய அதிர்ச்சி நிறைந்த கவலையை தமிழக மக்களுக்கு தந்துள்ளது.












Click it and Unblock the Notifications