சமத்துவ பொங்கல் விழாவில் கலகலப்பு.. கயிறு இழுக்கும் போட்டி! கயிறு அறுந்து விழுந்த தஞ்சை மேயர்
தஞ்சை: பொங்கல் விழாவையொட்டி தஞ்சை மாநகராட்சியில் நடந்த கயிறு இழுக்கும் போட்டியில் கயிறு அறுந்து மேயர், துணை மேயர் உள்ளிட்டோர் கீழே விழுந்தனர்.
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி, மாநகராட்சி மண்டல குழுத் தலைவர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி மாநகராட்சி அலுவலகத்தில் ஊழியர்களுக்கு கோலப்போட்டி, ஸ்லோ சைக்கிள் ரேஸ், மியூசிக்கல் சேர் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
பொங்கல் விழாவில் கயிறு இழுத்தல் போட்டியும் நடத்தப்பட்டது. அப்போது மேயர் சண். ராமநாதன் தலைமையில் ஆண்கள் ஒரு புறமும் துணை மேயர் அஞ்சுகம் பூபதி தலைமையில் பெண்கள் மறுபுறமும் நின்றுக் கொண்டு போட்டிக்கு தயாராகினர். அப்போது அந்த கயிறு இத்துபோனதோ என்னவோ தெரியவில்லை.
ஆண்களும் பெண்களும் தம் பிடித்து இழுத்தனர். இதில் கயிறு அறுந்தது. இரு தரப்பினரும் கீழே விழுந்தனர். உடனே மேயர், துணை மேயர், அதிகாரிகள் என அனைவரும் சிரித்துக் கொண்டனர். அப்போது சிரித்தபடியே வந்த மேயர் கயிறையே அறுத்துப்புட்டீங்களேம்மா என கேட்டார். அதற்கு அஞ்சுகம் பூபதியோ நாங்கள் இழுத்ததாலத்தான் கயிறு அறுந்தது, நாங்கள்தான் ஜெயிச்சோம்னு சொன்னார்.
இப்படியாக நகைச்சுவை ததும்ப சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. அது போல் இந்த விழாவில் லெமன் அன்ட் ஸ்பூன், சாக்குப்பையை லுங்கி போல் மாட்டிக் கொண்டு குதித்தபடியே வரும் போட்டிகளும் நடத்தப்பட்டன.












Click it and Unblock the Notifications