ராஜராஜ சோழனை கடுமையாக விமர்சித்த பா.ரஞ்சித்.. தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர்!
Recommended Video
தஞ்சை: ராஜராஜ சோழனை விமர்சித்த இயக்குநர் பா. ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து அவர் பேசிய பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். அப்போது மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து கடுமையாக விமர்சித்தார் பா.ரஞ்சித்.

தரக்குறைவாக விமர்சித்த ரஞ்சித்
மன்னர் ராஜ ராஜ சோழனை அவன் இவன் என ஏக வசனத்தில் பேசினார் பா.ரஞ்சித். ராஜ ராஜ சோழன் ஒரு அயோக்கியன் என்றும் சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் ஆட்சி காலத்தில்தான் தலித் மக்களின் நிலம் அத்தனையும் பறிக்கப்பட்டுள்ளது என்றும் அவருடைய ஆட்சி காலம் இருண்ட காலம் என்றும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

ரஞ்சித்துக்கு கண்டனம்
அவரது பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல இந்து அமைப்புக்கள் ராஜ ராஜ சோழன் குறித்த பா ரஞ்சித்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தன.

தாமாக முன்வந்த இன்ஸ்பெக்டர்
இந்நிலையில் ராஜராஜ சோழனை விமர்சித்த இயக்குநர் பா. ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பனந்தாள் இன்ஸ்பெக்டர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தார்.

கலவரத்தை தூண்டும் வகையில்
கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணை விரைவில் நடைபெறும் என தெரிகிறது.

முக்குலத்தோர் புலிப்படை
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல காவல்நிலையங்களில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ளன. இன்று காலை கும்பகோணம் காவல்நிலையத்தில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications