பெங்களூரு வியாபாரியின் கதையை முடித்த கும்பல்..10 அடி குழியில் உடல்! இப்படி ஒரு காரணமா? ஷாக் தேனி
தேனி: தேனியில் கடத்தப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த கண்ணாடி வியாபாரியை கொலை செய்து புதைத்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. போலி நகை விற்ற புகாரில் அவர் கொலை செய்யப்பட்ட நிலையில், வருவாய்த்துறையினர் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு மடுவாலா பகுதியைச் சேர்ந்தவர் திலீப். இவர் வீடுகளில் அலங்காரத்திற்கு வைக்கும் கண்ணாடி பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இவரும் இவருடைய சகோதரி ராதா என்பவரின் மகன் கலுவா என்பவரும் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதிகளில் தங்கி இருந்து கண்ணாடி பொருட்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்களுக்கு தேனியைச் சேர்ந்த மோகன் என்பவர் ஏற்கனவே அறிமுகம் ஆகி இருந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் திலீப்,கலுவா ஆகிய இருவரையும் தேனி புதிய பேருந்து நிலையம் வரும்படி மோகன் கூறியுள்ளார்.

அதன் பேரில் தேனி பேருந்து நிலையம் வந்த இருவரையும் தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தேனி புறவழிச் சாலை பகுதிக்கு அழைத்துச் சென்றார்.அப்போது காரில் வந்த ஒரு கும்பல் இவர்கள் இருவரையும் கடத்திச் சென்றது. மேலும் போலி நகைகள் விற்பனை செய்யும் வியாபாரிகள் நீங்கள்தானே எனக்கூறி அவர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கினர்.மேலும் தேனி அருகே உள்ள தனியார் தென்னந்தோப்பில் வைத்து தென்னை மட்டையாலும் சரமாரியாக தாக்கிய நிலையில்,கலுவாவை அங்கேயே விட்டுவிட்டு, திலீப்பை மட்டும் கடத்திச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து பெங்களூரு சென்ற கலுவா இது தொடர்பாக திலீப்பின் சகோதரி நிர்மலா என்பவரை அழைத்து வந்து கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.இந்தப் புகார் மீதான விசாரணை தேனி நகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், காவல் ஆய்வாளர் ஜவஹர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரித்தனர்.இந்த விவகாரத்தில் தொடர்புடைய மோகன் தலைமறைவாகிவிட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முகேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட ஜெயக்குமார், முருகன், ஆகாஷ், முத்துப்பாண்டி, சதீஷ்குமார், சௌமியன் என மொத்தம் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திலீப்பை அடித்து கொலை செய்து பின்னத்தேவன்பட்டி அருகே உள்ள சர்க்கரைபட்டி என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் புதைத்ததாக தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் புகார் தாரரான நிர்மலாதேவி மற்றும் கலுவாவிற்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வரவழைக்கப்பட்ட நிலையில், நேற்று தேனி வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறையினர் முன்னிலையில் போலீசார், குற்றவாளிகளில் ஒருவரான முருகன் அடையாளம் காட்டிய இடத்தில் தோண்டி புதைக்கப்பட்ட திலீப்பின் உடலை மீட்க முயற்சித்தனர். சுமார் 7 அடி ஆழம் வரை மண்வெட்டியால் தோண்டிய நிலையில்,உடல் கண்டுபிடிக்க முடியாததால், பின்னர் பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
புதைக்கப்பட்டவர் திலீப் தான் என்பதை நிர்மலா மற்றும் கலுவா ஆகியோர் அடையாளம் காட்டினர். இதனைத் தொடர்ந்து அந்த இடத்திலேயே மருத்துவர்கள் குழு பிரேத பரிசோதனை நடத்தியது.
பின்னர் உறவினர்கள் வேண்டுகோளுக்கிணங்க தேனி மின் மயானத்தில் உடல் எரியூட்டப்பட்டது. பெங்களூருவைச் சேர்ந்த நபரை தேனியைச் சேர்ந்த நபர்கள் கடத்தி அடித்து கொலை செய்து புதைத்த சம்பவம் தேனி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கலுவா மற்றும் திலீப் ஆகியோர் தங்க நகைகள் என்று கூறி போலி நகைகளை ஆண்டிபட்டியைச் சேர்ந்த மோகன் என்பவருக்கு விற்பனை செய்ததாகவும்,அதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாகவே இந்த கொலைச் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications