எங்கே இருந்தாலும் 9.30 மணிக்கு எதிர்நீச்சல் பார்த்துவிடுவேன்! ஓபனாக பேசிய ஆண்டிப்பட்டி திமுக MLA!
தேனி: மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பேட்டியளித்த ஆண்டிப்பட்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், எங்கே இருந்தாலும் 9.30 மணிக்கு எதிர்நீச்சல் பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்துவிடுவேன் என தெரிவித்துள்ளார்.
மாரிமுத்துவின் நடிப்புக்காகவே அந்தத் தொடரை தாம் பார்த்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் நடிகர் மாரிமுத்து தனது நடிப்பின் மூலம் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

இதனிடையே ஒரு நாளைக்கு கொஞ்சம் லேட்டாக வீட்டுக்கு வந்தால் கூட, தனது மனைவியிடம் எதிர்நீச்சல் நாடகத்தில் இன்னைக்கு என்னம்மா நடந்தது எனக் கேட்டுத் தெரிந்துக் கொள்வேன் என ஆண்டிப்பட்டி திமுக எம்.எல்.ஏ.மகாராஜன் கூறியுள்ளார். மாரிமுத்து தங்கள் பகுதியை சேர்ந்தவர் என்பது ஆரம்பத்தில் தெரியாது என்றும் மலைக்கிராமத்திலிருந்து சென்னைக்கு சென்று இந்தளவு புகழ் பெற்றிருக்கிறார் என்றால் அது சாதாரண காரியமல்ல எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் மாரிமுத்து மேல் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நல்ல அபிப்பிராயமும், பிரியமும் இருந்ததாக கூறிய திமுக எம்.எல்.ஏ. மகாராஜன், எதிர்காலத்தில் மாரிமுத்துக்கு இன்னும் பல உயர்வுகள் கிடைத்திருக்கும் என வேதனையை பகிர்ந்தார். திமுகவுக்கும், மாரிமுத்துவுக்கும் உள்ள தொடர்பு என்னவென்றால் பகுத்தறிவு தான்.

கட்சி, அரசியலை கடந்து மாரிமுத்துவின் ரசிகன் என்ற முறையில் அவரது உடலுக்கு தாம் அஞ்சலி செலுத்த வந்ததாக மகாராஜன் எம்.எல்.ஏ. தெரிவித்தார். கடமலைக்குண்டு அதிமுக ஒன்றியம் சார்பில் இரங்கல் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications