தேவாரம் ஆபீஸில் விறுவிறுன்னு வந்த ஆபீசர்ஸ்.. அப்படியே உறைந்து போன தேனி அரசு ஊழியர்
தேனி: இலவச விவசாய மின் இணைப்பு பெறுவது என்பது மிகவும் சவாலானது. பலர் பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆண்டுக்கு கணிசமானோருக்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அதேநேரம் பழைய காலத்தில் வழங்கப்பட்ட இலவச விவசாய மின் இணைப்பு சில நேரங்களில் தவறுகள் காரணமாக துண்டிக்கப்படும். அப்படி துண்டிக்கப்பட்ட இலவச விவசாய மின் இணைப்பை திரும்ப தருவதற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய என்ஜினியர் தேனி மாவட்டம் தேவாரத்தில் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் தேவாரம் காமராஜர் மார்க்கெட் தெருவில் வசிப்பவர் மணி. இவருடைய மகன் ராமசந்திரனுக்கு 29 வயது ஆகிறத. இவர், ராணுவத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று தேவாரத்திற்கே வந்துவிட்டார். ராணுவ வீரரான ராமச்சந்திரன், தேவாரம் புதுக்குளம் செல்லும் சாலையில் உள்ள தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார்.

கடந்த ஆண்டு மின் வாரியத்தினர் ராமச்சந்திரனின் தோட்டத்தில் இருந்த இலவச மின் இணைப்பை துண்டித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் மின் இணைப்பு கேட்டு தேவாரம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருக்கிறார். அப்போது மின்வாரிய அதிகாரிகள் அவரது விண்ணப்ப மனுவை பரிசீலனை செய்து, தோட்டத்திற்கு மின் இணைப்பு வழங்க உத்தரவிட்டிருக்கிறார்கள்.
ஆனால் தேவாரத்தில் உள்ள மின் வாரிய அதிகாரிகள் மின் இணைப்பு வழங்காமல் ராமச்சந்திரனை அலைக்கழிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராமச்சந்திரன், தேவாரம் மின்வாரிய பொறியாளரான லட்சுமணன் (37) என்பவரை சந்தித்து மின் இணைப்பபினை விரைந்து வழங்கும்படி கேட்டார். அதற்கு லட்சுமணன் மின் இணைப்பு வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க மனமில்லாத ஓய்வு பெற்ற ராணுவ வீரரான ராமச்சந்திரன், இதுகுறித்து தேனி ரத்தினம் நகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் சென்று நடந்த விவகரங்களை கூறி புகார் அளித்தார். அப்போது போலீசார், மின்வாரிய பொறியாளர் லட்சுமணனை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதற்காக 20 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் ரசாயனம் தடவி, அதனை ராமச்சந்திரனிடம் கொடுத்து தேவாரம் மின்வாரிய அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று லட்சுமணன் வழக்கம்போல் தேவாரம் மின்வாரிய அலுவலகத்தில் பணியில் இருந்திருக்கிறார். அப்போது ராமச்சந்திரன் ரசாயனம் தடவிய 20 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை லட்சுமணனிடம் கொடுத்திருக்கிறார் அப்போது அலுவலகத்துக்கு வெளியே நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அதிரடியாக உள்ளே நுழைந்து லஞ்ச பணத்துடன் லட்சுமணனை கைது செய்தார்கள்.
பின்னர் தேவாரம் மின்வாரிய பொறியாளர் லட்சுமணனிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்ழு நாகராஜன், இன்ஸ்பெக்டர்கள் ராமேஸ்வரி, ஜெயபிரியா தலைமையிலான போலீசார், மின்வாரிய அலுவலகத்தில் வைத்து சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள மின் இணைப்பு கோப்புகள் குறித்து விசாரணை நடந்தது. அதன் பின்னர் லட்சுமணனை அழைத்துக்கொண்டு, பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். விவசாய மின் இணைப்பு பெற ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications