நீட் தேர்வில் சென்னை மாணவி பிரியங்காவுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பெண் யார்?
தேனி: நீட் தேர்வில் சென்னை மாணவிக்காக ஆள்மாறாட்டம் செய்த பெண் யார் என்பது குறித்தும். இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நீட்' தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன், மாணவர் பிரவீண், அவருடைய தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவருடைய தந்தை டேவிஸ், வாணியம்பாடியை சேர்ந்த மாணவர் இர்பானின் தந்தை முகமது ஷபி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாணவர் இர்பான் நீதிமன்றத்தில் சரண் அடைந்ததை தொடர்ந்து அவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சி.பி.சி. ஐ.டி. போலீசார் சந்தேகமடைந்து விசாரித்தனர்.. ஒரே பெயர் முகவரியில் இரு இடங்களில் தேர்வு எழுதியவர் குறித்த விவரங்களை உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமையிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கேட்டிருந்தனர்.

போலீஸ் விசாரணை
அவர்கள் கொடுத்த விவரங்களின் அடிப்படையில் சென்னை சவிதா மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பில் இந்த ஆண்டு சேர்ந்த தர்மபுரி மாணவி பிரியங்கா, அவரது தாயார் மைனாவதி ஆகியோரை நேற்று தேனிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், விசாரணை முடிவில் அவர்கள் தவறு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தாய் மற்றும் மகள் இருவருமே நேற்று கைது செய்து செய்யப்பட்டனர்.

கண்டுபிடித்த போலீஸ்
சி.பி.சி.ஐ.டி. இனஸ்பெக்டர் சித்ரா தேவி தலைமையிலான போலீசார் அவர்களிடம் ஒரே முகவரியில் 2 இடங்களில் தேர்வு எழுதியது எப்படி? பிரியங்காவுக்காக தேர்வு எழுதிய பெண் யார்? இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என பல கோணங்களில் விசாரித்தனர்.

அதிகாரிகள் உடந்தை
பிரியங்கா ஆள் மாறாட்டம் மட்டுமல்ல.மதிப்பெண் சான்றிதழை திருத்தியும் மோசடி செய்துள்ளார் இதற்கு மருத்துவ துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கலாம் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் சந்தேகித்துள்ளனர். அந்த அதிகாரிகள் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

இடைத்தரகர்கள் ஏற்பாடு
இதேபோல் பிரியங்காவுக்காக தேர்வு எழுதிய பெண் யார் என்ற கேள்வியையும் அவரது தாய் மைனாவதியிடம் கேட்டனர். அதற்கு அவர் இடைத்தரகர்கள் மூலமாகவே ஏற்பாடு செய்ததாக கூறினார். அந்த தரகர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இருவரும் சிறையில்
இதனிடையே பிரியங்கா மற்றும் அவரது தாயார் ஆகியோர் தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்கள். அவர்களை வருகிற 25-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications