தினகரனை நடுத்தெருவில் நிறுத்தியவர் தங்கம்.. ஓபிஎஸ் ஏன் இப்படி சொல்கிறார்?
தேனி: டிடிவி தினகரனை தனிக்கட்சி ஆரம்பிக்க வைத்து, அவரை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு திமுகவில் சேர்ந்தவர் தங்கதமிழ்செல்வன் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அண்மையில் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக சார்பில், முன்னாள் எம்எல்ஏ தங்கதமிழ்செல்வன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் முத்துசாமி போட்டிடுகிறார்.
இதில் தங்கதமிழ்செல்வன், முத்துசாமி இருவருமே ஒரு காலத்தில் ஓ பன்னீர்செல்வத்துடன்இணைந்து அதிமுகவில் அரசியல் செய்தவர்கள். ஒன்றாக பல தேர்தல்களில் வேலை பார்த்தவர்கள் என்பதால் போட்டி கடுமையாக உள்ளது.

கருத்துக்கணிப்புகள்
தங்கதமிழ்செல்வன், ஓ பன்னீர்செல்வத்தை தொகுதி முழுவதும் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த முறை எப்படியும் தனக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் களம் இறங்கி உள்ளார். இடஒதுக்கீடு பிரச்சனை, வேளாளர் பெயர் மாற்ற விவகாரத்தில் சில பிரிவினரிடையே நிலவும் அதிருப்தி ஆகியவை ஓ பன்னீர்செல்வத்திற்கு பாதகமாக இருந்தாலும், தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக ரேஸில் முன்னிலையில் உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

முழு ஆதரவு
இதனிடையே தங்கதமிழ்செல்வன் குறித்த கேள்விக்கு ஒ பன்னீர்செல்வம் கூறுகையில், தங்கதமிழ்செல்வன் குறித்த கடந்த கால வரலாறுகளை பார்க்கும் போது, நானும் அவரும் நண்பர்களாகத்தான் இருந்தோம். எங்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை. அவர் மாவட்ட செயலாளராக இருந்த போது, சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது அவருக்கு என் முழு ஆதரவை அளித்திருக்கிறேன்.

தினகரன் கட்சி
இன்றைக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை எதிர்த்து நிற்கிறார். முன்பு டிடிவி தினகரன் தனியாக கட்சி ஆரம்பிக்க சொல்லி, அவரும் கட்சி ஆரம்பித்தார். ஆனால் டிடிவி தினகரனை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு, தங்கதமிழ்செல்வன் திமுகவில் சேர்ந்துவிட்டார்.இதுதான் தங்கதமிழ்செல்வனின் குணாதிசயங்கள். தற்போது இவை துரோகச்செயலாக இடம் பெற்றிருக்கிறது என்றார்.

வரலாறு என்ன
அதிமுகவின் 18 எம்எல்ஏக்களுடன் டிடிவி தினகரன் பிரிந்து தனி அணி ஆரம்பித்ததற்கு முக்கிய காரணம் ஓ பன்னீர்செல்வத்தை அதிமுகவில் மீண்டும் சேர்த்தது தான். அப்போது டிடிவி தினகரனுக்கு பக்கபலமாக இருந்தவர் தங்கதமிழ்செல்வன், அமமுகவை தினகரன் ஆரம்பித்த போது முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் மாறினார் ஆனால் எம்பி தேர்தல் தோல்வியால் அதிர்ச்சி அடைந்த அவர், திமுகவில் சேர்ந்தார். இப்போது ஓ பன்னீர்செல்வத்தை எதிர்த்து திமுக சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளார்.

தினகரன் குறித்து மென்மை
இந்நிலையில் தினகரனை தங்கம் தான் தனி கட்சி ஆரம்பிக்க தூண்டிவிட்டதாக ஒபிஎஸ் இப்போது கூறவேண்டிய அவசியம் ஏன் என்ற கேள்வி எழுகிறது. தினகரன் மீது அவரது பேச்சுக்கள் மென்மையாகவே இருப்பதாக சொல்லப்படுகிறது. தொகுதியில் சமுதாய வாக்குகளை அதிகம் உள்ளதால் அது சிதறக்கூடாது என்பதாக தங்கத்தை விமர்சித்திருப்பதாகவே அமமுகவினர் கருதுகிறார்கள். அமமுகவில் இருந்து பிரிந்தவர் என்பதால் அமமுகவினர் தங்கத்திற்கு எதிரான மனநிலையில் உள்ளதால் , அவர்களின் வாக்குகள் கிடைப்பது கடினம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications