தேனியில் வெலவெலக்க வைத்த வீட்டு விசேஷம்.. மின்வாரியத்தில் இருந்து பறந்த வார்னிங்
தேனி: தேனி மின்பகிர்மான கோட்டத்தில், மின் விபத்துகளை தவிர்க்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதம் போடி பகுதியில் நடந்த ஒரு வீட்டு விசேஷத்தின்போது, சாமியானா பந்தலில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்தார். மைக் செட் அமைப்பாளர் விளக்குகளை கட்டும்போது, மின்சார வயரில் ஊசி மூலம் துளையிட்டுப் பயன்படுத்தியதே காரணம். இனி மின்வயரில் ஊசி குத்தி விளக்கு கட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரி எச்சரித்துள்ளார்.
இன்றைக்கும் பலர் வீட்டு விசேஷங்கள், கோயில் விசேஷங்களுக்கு மின்சார வயதை அறுத்து மின்சாரத்தை திருடுவது தொடர்கிறது. கிராமங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் இன்னும்சில பகுதிகளில் தொடர்ந்து வருகிறது. அப்படி மின்சாரம் திருடுவதை அதிகாரிகள் கண்டுபிடித்தால் கடுமையான அபராதம் விதிப்பார்கள். சில நேரங்களில் கைது நடவடிக்கை எடுக்க போலீசில் புகாரும் அளிப்பார்கள். தேனி மாவட்டத்தில் வீட்டு விசேஷத்தில் நடந்த சம்பவம் மின்வாரிய அதிகாரிகளை வெலவெலக்க வைத்துள்ளது.

இதையடுத்து தேனி மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகா வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "தேனி மின்பகிர்மான கோட்டத்தில், மின் விபத்துகளை தவிர்க்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதம் போடி பகுதியில் நடந்த ஒரு வீட்டு விசேஷத்தின்போது, சாமியானா பந்தலில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்தார். மைக் செட் அமைப்பாளர் விளக்குகளை கட்டும்போது, மின்சார வயரில் ஊசி மூலம் துளையிட்டுப் பயன்படுத்தியதே இந்த விபத்திற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
இத்தகைய பாதுகாப்பற்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பவை. எனவே, மின் வயர்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். மின் கசிவு ஏற்படும்போது மின் இணைப்பை துண்டித்து உயிரைக் காக்கும் 'இ.எல்.சி.பி' என்ற கருவியின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் உணர வேண்டும். மனித இதயம் 40 மில்லி ஆம்ஸ் மின்சாரத்தையே தாங்கும் திறன் கொண்டது. ஆனால், இந்த கருவி 30 மில்லி ஆம்ஸ் மின் கசிவு ஏற்பட்டால் கூட 50 மில்லி வினாடிக்குள் மின்சாரத்தைத் துண்டித்துவிடும்.
எனவே, மின் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு, பந்தல் மற்றும் மைக்செட் அமைப்பாளர்கள் மின் பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தரமான ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற 'இ.எல்.சி.பி' கருவிகளை பொருத்த வேண்டும். மலிவு விலையில் கிடைக்கும் தரமற்ற சாதனங்களை தவிர்க்க வேண்டும்.
மின்வயரில் ஊசி குத்தி விளக்கு கட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்படுபவர்கள் மீது இந்திய மின்சார சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மின்சாரம் தொடர்பான எந்தவொரு பணியையும் மேற்கொள்ளும் முன் மின்வாரியத்தின் ஆலோசனையை பெற வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications