தேனியில் பரபரப்பு.. அல்லிநகரம் வீட்டில் பெண்ணை சுற்றி வளைத்த 4 பேர்.. இப்ப அரசு மருத்துவமனையில்?
தேனி: தேனி அரசு மருத்துவமனையில் அந்த இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளார்.. இந்த சம்பவம் குறித்த விசாரணையையும் போலீசார் துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலம் தான் பெரும் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
தேனியை அடுத்துள்ளது பழனிசெட்டிபட்டி.. இங்குள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்றைய தினம் 22 வயது இளம்பெண் ஒருவர் மூச்சிறைக்க ஓடிவந்துள்ளார்.. அங்கிருந்த போலீசாரிடம் தன்னை 4 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர் என்று கூறி புகார் தந்துள்ளார்.

தேனி மகளிர் போலீஸ்
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தந்துவிட்டு, தேனி மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அந்த பெண்ணை அழைத்து சென்றனர். அங்கு இளம்பெண்ணிடம் விசாரணை ஆரம்பமானது. அப்போதுதான் அந்த பெண்ணுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருப்பதும், அவர் தன்னுடைய கணவருடன் வசித்து வருவதும் தெரியவந்தது.
தனக்கு என்ன நடந்தது என்பது குறித்து போலீசாரிடம் அந்த பெண் சொல்லும்போது, "நான் பழனிசெட்டிபட்டி பகுதியிலுள்ள ஒரு பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருந்தேன். அப்போது, ஏற்கனவே அறிமுகமான ஆட்டோ டிரைவரும், இன்னொருவரும், பைக்கில் வந்தார்கள். பஸ் ஸ்டாண்டில் நான் நிற்பதை பார்த்ததுமே, என்னை வீட்டில் விட்டுவிடுவதாக கூறி பைக்கில் அழைத்தனர்.
அல்லிநகரம் வீடு
நான் பைக்கில் ஏறியதும் என்னை மிரட்டி அல்லிநகரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் அழைத்து சென்றனர். அங்கு வேறு ஒரு நபர் வந்தார்.. 3 பேரும் என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர். பிறகு அங்கு வந்த 4வது இளைஞர், என்னை வீட்டில் விடுவதாக கூறி, டூ வீலரில் அழைத்துச் சென்றார். அவர், திண்டுக்கல் - குமுளி ரோட்டில் ஆதிப்பட்டி அருகே ஓரிடத்திற்கு அழைத்துச் சென்று, மிரட்டி சித்ரவதை செய்தார். இந்த 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கண்ணீர் மல்க புகார் கூறினார்.
இதையடுத்து, இந்த புகாரின் அடிப்படையில் 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேட ஆரம்பித்தனர்.. இறுதியில் அன்று மாலையே, அந்த 4 பேரையும் சுற்றிவளைத்து பிடித்து, தேனி மகளிர் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
தேனி அரசு மருத்துவமனை
அதேபோல, சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்ட, அல்லிநகரம் வீட்டுக்கும், போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பிறகு பாதிக்கப்பட்ட பெண்ணை தேனி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மெடிக்கல் செக்கப் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும், விசாரணையை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து சட்டரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.. தேனி பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications