தேனியில் பெண்ணை கன்னத்தில் அறைந்த காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
தேனி: தேனியில் பெண்ணை கன்னத்தில் அறைந்ததாக காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தேனி மக்களவைத் தொகுதி பெரியகுளம் சட்டசபை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தேனி நேரு சிலை அருகே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. நேரு சிலை முன்பு பலத்த கூட்டம் இருந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

ஓட்டுநர்
அந்த நெருக்கடியில் வாகனங்கள் சிக்கித் திணறின. இந்த நிலையில் பயணிகளை ஏற்றிக் கொண்டு டாடா ஏசர் வாகனம் எனும் ஷேர் ஆட்டோ நெருக்கடி திணறியது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகேசன், வாகனத்தை வேகமாக இயக்குமாறு ஓட்டுநர் ஒருவரை கேட்டுக் கொண்டார்.

அதிர்ச்சி
அந்த வாகனத்தில் இருந்த பெண் ஒருவர், முருகேசனை நோக்கி கையெடுத்து கும்பிட்டார். அப்போது அந்த பெண்ணின் கன்னத்தில் முருகேசன் ஓங்கி அறைந்தார். கையெடுத்து கும்பிட்ட பெண்ணை போலீஸ் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரவு
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. இதையடுத்து முருகேசனை ஆயுதப்படைக்கு மாற்றி காவல் துறை உத்தரவு பிறப்பித்தது.

பரபரப்பு
கடந்த 2017-ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடைகளை எதிர்த்து ஏராளமான பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அந்த பெண்களை கலைப்பதற்காக அங்கு வந்த எஸ்பி பாண்டியராஜன் ஒரு பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications