காக்ரோச் + திமுக + திரிணாமூல் + ஆம் ஆத்மி.. தேசிய அளவில் உருவாகும் 3வது கூட்டணி.. காங்கிரஸ் காலி
டெல்லி: நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள் மற்றும் இளைஞர் வேலைவாய்ப்பின்மை ஆகிய விவகாரங்களை முன்னிறுத்தி நாடு முழுவதும் வெடித்துள்ள மாணவர்கள் போராட்டம், தற்போது இந்திய அரசியலின் போக்கையே மாற்றக்கூடிய அளவுக்குப் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி அமைப்பின் ஒருங்கிணைப்பில் நடந்து வரும் போராட்டங்களுக்குப் பின்னணியில், தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத ஒரு புதிய 3வது அணி உருவாகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் கசிந்துள்ளன.

மாநிலக் கட்சிகளுடன் புதிய கூட்டணி?
டெல்லியில் கடந்த சில வாரங்களாகத் தீவிரமடைந்துள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல பிராந்தியக் கட்சிகள் தொடர்ந்து நேரடி ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இருப்பினும், இப்போராட்டத்தின் பலத்தை மேலும் அதிகரிப்பதற்காக, மாணவர் இயக்க தலைவர்கள் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது:
காங்கிரஸ் இல்லாத புதிய மேடை:
தேசிய அளவில் பாஜகவிற்கு முதன்மை எதிர்க்கட்சியாக தங்களைக் கட்டியமைக்க முயலும் காங்கிரஸை ஒதுக்கிவிட்டு, வலுவான மாநிலக் கட்சிகளுடன் மட்டும் கூட்டணி அமைக்க CJP ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
பிராந்திய வலிமை:
டெல்லியில் ஆம் ஆத்மி, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக ஆகிய வலுவான ஆளுமை கொண்ட மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு தேசிய அளவிலான இளைஞர் - மாநிலக் கட்சிகளின் முன்னணியை உருவாக்கத் திட்டமிடப்படுகிறது.
சோனம் வாங்சுக் ஆதரவும், பரவும் போராட்டங்களும்
சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், சிஜேபி போராட்டத்திற்கு ஆதரவாக டெல்லி ஜந்தர் மந்தரில் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்தது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டம் டெல்லியைத் தாண்டி பாட்னா, பெங்களூர், சென்னை, கொல்கத்தா மற்றும் கேரளாவிலும் தீவிரமடைந்தது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா, நீட் தேர்வை ரத்து செய்து தேர்வு முறைகளில் முழுமையான சீர்திருத்தம் கொண்டு வருவது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்தியா கூட்டணிக்குள் பிளவா?
தற்போதுள்ள இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கும் நிலையில், நீட் மற்றும் மாணவர்கள் விவகாரத்தில் காங்கிரஸ் காட்டும் மெத்தனப் போக்கால் CJP தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. நீட்டை அறிமுகம் செய்ததே காங்கிரஸ்தான் என்பது வேறு கதை.
ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் திமுக தலைவர்கள் இப்போராட்டக் களத்தில் காட்டிய தீவிர ஆதரவு, இவர்களை ஒன்றிணைக்க ஒரு பாலமாக அமைந்துள்ளது.
காங்கிரஸை தவிர்த்துப் புதிய கூட்டணி அமைந்தால், அது வரவிருக்கும் பாராளுமன்றக் கூட்டத்தொடரிலும் தேசிய அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
அரசியல் மேடைகளில் தங்களின் குரல் கேட்கப்படவில்லை எனக் கருதும் இளைஞர் சமுதாயத்தின் இந்த எழுச்சி, 2029 பொதுத்தேர்தலுக்கு முன்பாகவே இந்திய அரசியலில் புதிய கூட்டணிக்கு வித்திட்டுள்ளது.












Click it and Unblock the Notifications