கடனுக்காக இரவில் அசிங்கமாக பேசிய நிதி நிறுவன ஊழியர்கள்? தேனியில் குடும்பமே தற்கொலை
தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் இன்று காலை உயிரை மாய்த்துக் கொண்டனர். இந்த சம்பவம் தேனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்த சொக்கநாதபுரத்தை சேர்ந்த 60 வயதாகும் கூலித் தொழிலாளி செவத்தி வீரன், அவரது மனைவியான 55 வயதாகும் ஒச்சம்மாள் , 33 வயதாகும் மகன் ராஜேஷ் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் இன்று காலை அவரது வீட்டில் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டார்கள்.

முன்னதாக, இன்று அதிகாலை நீண்ட நேரமாக இவர்களின் வீடு திறக்கப்படாததை அடுத்து, சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது மூவரும் இறந்த நிலையில் கிடந்தது தெரிய வந்துள்ளது. பின்னர், அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சின்னமனூர் போலீசார், தற்கொலை செய்து கொண்ட கூலித் தொழிலாளி செவத்தி வீரன் உட்பட மூவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சோதனையில், மூவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மேலும், இதுகுறித்து சின்னமனூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக இவர்கள் மூவரும் ஏதேனும் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவலால் இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடனை திருப்பிச் செலுத்த காலதாமதம் ஆனதால் இரவு நேரத்தில் வந்து தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், செவத்தி வீரன் குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டி அவதூறு செய்தனராம். அக்கம் பக்கத்தினர் முன்னிலையில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் இப்படி அவமானப்படுத்தியால் உயிரை மாய்த்துக் கொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தேனி மாவட்டம் சின்னமனூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications