தே.ஜ கூட்டணியில் 6 சீட் என்பது வதந்தி.. அமமுகவுக்கு அழுத்தம் தர முடியாது.. டிடிவி தினகரன் கறார்
தேனி: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைக்க திமுகவும், அவர்களிடம் ஆட்சியை தட்டி பறிக்க அதிமுக - பாஜக கூட்டணியும் முயற்சி செய்து வருகிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.
அப்போது பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரனை கூட்டணியில் இணைக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அமமுகவுக்கு 6 சீட்கள் ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 6 சீட்கள் ஒதுக்கப்பட்டது என்பது வதந்தி. கூட்டணி குறித்து எங்களுக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது என்று தினகரன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

தேனி ஆண்டிப்பட்டியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அமமுக வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. எங்களை தவிர்த்து விட்டு யாரும் வெற்றி பெற முடியாத நிலை நிலவுகிறது. தேசிய ஜனநாயக வட்டணியில் அமமுகவுக்கு 6 சீட்கள் ஒதுக்கீடு என்பது வதந்தி. ஊடகங்கள் செய்தியின் உண்மைதன்மை தெரியாமல் வெளியிடக் கூடாது. எங்கள் வீட்டு பிள்ளைக்கு நாங்கள் தான் கல்யாணம் செய்வோம்.
ஆண்டிபட்டி எங்களுக்கு தான்
அதை ஊடகங்கள் செய்ய கூடாது. தினகரனையோ, அமமுகவையோ யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது. முக்கிய கட்சிகள் எங்களை கூட்டணிக்கு அழைத்து பேசுவது உண்மை. அமமுகவுக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. எங்கள் கட்சிக்கு எது நல்லதோ, தமிழ்நாடு மக்களின் நலனை யோசித்து முடிவு செய்வோம். எங்கள் நிலைப்பாட்டை கிளிப்பிள்ளை போல பலமுறை சொல்லிவிட்டோம். தை மாதத்தில் முடிவு செய்வோம்.
கடந்தமுறை எங்கள் வேட்பாளர்கள் சட்டமன்றத்திற்குள் செல்லவில்லை. இந்தமுறை எங்கள் வேட்பாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக செல்ல இருக்கிறார்கள். எந்த கூட்டணியில் இருந்தாலும் ஆண்டிபட்டி தொகுதியில் அமமுக தான் போட்டியிடும். யார் போட்டியிடுவது என்பதை முடிவு செய்யவில்லை. 70 வருடங்களாக இயங்கும் கட்சிகளுக்கு இணையாக அமமுக கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்.
நாங்கள் தான் முடிவு செய்வோம்
சுய நலத்திற்காக விலை போகாதவர்கள் என்னுடன் தான் உள்ளனர். நாங்கள் எந்தக் கூட்டணியில் இடம் பெறுவோம் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம். எங்களை யார் ஏற்றுக் கொள்வார்கள் என்பதை விட, யாரை ஏற்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம். அப்படிப்பட்ட சூழல்தான் தமிழ்நாடு அரசியலில் நிலவுகிறது. என்று கூறியுள்ளார். அவரின் கருத்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது." என்றார்.












Click it and Unblock the Notifications