நிரம்பி வழியும் வைகை அணை.. ஜூன் 4ல் தண்ணீர் திறப்பு -1.36 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி
வைகை அணை நிரம்பி வழிவதால் வரும் 4ஆம் தேதி பாசனத்திற்காக திறக்கப்படுகிறது. வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் 1.36 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
தேனி: கனமழை காரணமாக வைகை அணை நீர் மட்டம் உயர்ந்துள்ளது. பாசனத்திற்காக வரும் 4ஆம் தேதி முதல் வைகை அணை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் 1.36 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
டவ்தே புயல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தேனி மாவட்டத்தில் கடந்த வாரங்களில் பலத்த மழை பெய்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணைகளில் தண்ணீர் பெருகிறது.
பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும் மழை பெய்ததால் அணையின் நீர் மட்டம் 130 அடி வரை உயர்ந்தது. வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக அணையின் நீர் மட்டம் 66 அடியை எட்டியுள்ளது.
வைகை அணை 71 அடி உயரமுள்ள வைகை அணையில் நீர் மட்டம் 68 அடியை எட்டும் போது முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். 69 அடியை எட்டும் போது 2ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் 70 அடியை எட்டும் போது 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு தண்ணீர் திறக்கப்படும்.
தேனி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக வைகை அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக நீர் மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு இதே நாளில் வைகை அணையின் நீர் மட்டம் 41.98 அடியாக இருந்தது தற்போது அணையின் நீர் மட்டம் 66 அடியை நெருங்கியுள்ளதால் ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடும் சூழல் நிலவி வருகிறது.
வைகை அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால் மதுரை மாவட்டத்தின் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டம்.. தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது.. அமைச்சர் துரைமுருகன் உறுதி!
விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து ஜூன் 4ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. வினாடிக்கு 700 கன அடி முதல் தேவைக்கு ஏற்ப 2100 கன அடி வரை தண்ணீர் வெளியேற்றப்படும். முதல் போக பாசனத்துக்காக 2 மாதங்கள் வரையிலும் அதனைத் தொடர்ந்து 2ஆம் போக பாசனத்துக்காக மார்ச் மாதம் வரையிலும் தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் 1.36 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். பல ஆண்டுகளுக்கு பிறகு முதன் போக பாசனத்துக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.