சிக்கலில் பிஎம்சி நிறுவனம்.. 31 டன் தாது மணல் கடத்தல்.. ரவுண்டு கட்டி பிடித்த நெல்லை போலீஸ்!
திருநெல்வேலி: லாரியில் 31 டன் தாதுமணலை கடத்தி சென்ற 5 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லையில் அதிகளவில் தாது மணல் கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவதாக எழுந்த புகாரை அடுத்து மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பாளையங்கோட்டை, நான்கு வழிச்சாலை, கீழநத்தம் விலக்கு உள்ளிட்ட இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

இதனை சோதனையில் போலீஸ் துணை ஆணையர் டி.பி.சுரேஷ்குமார் தலைமையிலான தனிப்படை போலீசாரும், பாளையங்கோட்டை போலீசாரும், புவியியல் - சுரங்கத்துறை உதவி இயக்குநர் வினோத் உள்ளிட்ட அதிகாரிகளும் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த ராஜா என்பவர் டாரஸ் லாரியை அதிவேகமாக ஓட்டி வந்துள்ளார். அதையும் அத்துடன் வந்த காரையும் நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் உரிய அனுமதி இன்றி 31 டன் தாது மணல் லாரியில் ஏற்றி எடுத்து வரப்பட்டதை போலீசார் கண்டறிந்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திசையன்விளை அருகே குட்டம் என்ற கிராமத்தில் உள்ள பிஎம்சி என்ற தனியார் நிறுவனத்திலிருந்து மணல் கடத்தி வரப்பட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து லாரியோடு தாது மணலையும், பின்னால் வந்தவர்கள் ஓட்டிய காரையும் போலீசார் கைப்பற்றினர்.
பின்னர் லாரியை ஓட்டி வந்த ராஜா, திசையன்விளையை சேர்ந்த முத்துகிருஷ்ணன், வடக்கன்குளத்தை சேர்ந்த ஜான் அமல் வினோத், அப்புவிளை பகுதியை சேர்ந்த காண்டீபன், தூத்துக்குடி மாவட்டம் வருவப்பபுரத்தை சேர்ந்த கனகசபாபதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள தனியார் தாதுமணல் நிறுவனத்தின் உரிமையாளர் சுகுமார் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். லாரியில் கடத்திச் செல்லப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட தாது மணலின் விலை மட்டும் ரூ.4.76 லட்சம் என மதிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications