அரை நிர்வாண கோலத்தில் திமுக பிரமுகர்.. ராஜதந்திரங்கள் அனைத்தும் வீண்.. திருநெல்வேலி போலீஸ் அதிரடி
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே குளத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் திருடியதாக தொடரப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த திமுக பிரமுகர் கங்கை ஆதித்தன், போலீஸ் வருவதை அறிந்து வீட்டிற்குள் சென்று கதவை சாத்திக் கொண்டார். அங்கு நிர்வாண நிலையில் உட்கார்ந்து கொண்டு வரமறுத்த நிலையில், மனைவி சாதியை பற்றி பேசியதாக கூறி போலீசிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த காரியாண்டியை அடுத்த வெங்கட்ராயபுரம் சடயநேரி குளத்தில் கடந்த 17ம் தேதி பொக்லைன் எந்திரம் மூலம் சிலர் லாரியில் மண் அள்ளி கடத்துவதாக விஜயநாராயணம் போலீசாருக்கும், கிராம நிர்வாக அலுவலர் மகாஹரிசந்திரனுக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து விஜயநாராயணம் போலீசாரும் விஏஓ மகாஹரிசந்திரனும் மணல் கடத்தல் நடந்த இடத்திற்கு சென்றனர். அங்கு திருட்டு மண் அள்ளிக் கொண்டிருந்த பொக்லைன் எந்திரத்தையும், ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் குளத்தில் மண் அள்ளியதாக சாத்தான்குளத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் கங்கை ஆதித்தன் என்பவர் உள்பட 2 பேரை தேடிவந்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட திமுக பிரமுகரான கங்கை ஆதித்தனுக்கு முன்ஜாமீன் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கங்கை ஆதித்தனை கைது செய்வதற்காக நாங்குநேரி ஏஎஸ்பி பிரசன்னகுமார் தலைமையில் போலீசார் வெள்ளிக்கிழமை அதிகாலையில் சாத்தான்குளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார்கள்.
ஆனால் கங்கை ஆதித்தன் வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு திறக்க மறுத்து, அடம்பிடித்தார். ஒரு கட்டத்தில் போலீசார் கதவை திறக்க முயன்ற போது, அதை செய்யவிடாமல் தடுக்க தனது மகளை போலீஸ் முன்பு தள்ளி அவரது மனைவி இடையூறு செய்திருக்கிறாராம். ஒரு கட்டத்தில் கங்கை ஆதித்தன் வீட்டிற்குள் உடைகள் அனைத்தையும் அவிழ்த்து போட்டுவிட்டு, உள்ளே வர வேண்டாம் என்று மிரட்டி உள்ளார்.
இதனிடையே கங்கை ஆதித்தனின் மனைவியோ, ஏஎஸ்பி பிரச்சன்னகுமாரை மறித்து கடும் வாக்குவாதம் செய்தார். அப்போது ஏஎஸ்பி அந்த பெண்ணிடம், மணல் கடத்தல் வழக்கு குறித்தும், கைது செய்ய வந்தால் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று விளக்கம் அளித்தார். மேலும் சிறுவர்களை குறுக்கே நிற்க வைத்து அவர்களின் மனதையும் கெடுக்க வேண்டாம் என்றார். மேலும் 3 மணி நேரமாக ஏன் கதவை திறக்கவில்லை என்று கேட்டார். இந்நிலையில் அந்த பெண் கடைசி ஆயுதமாக போலீசார் தன்னை சாதியை சொல்லி திட்டியதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது ஏஎஸ்பி, பொய் சொல்லாதீங்கம்மா, நீங்க என்ன சாதி என்றே தெரியாது என்றும் விளக்கம் அளித்தார். கடைசியில் ஒருவழியாக, வீட்டுக்குள் இருந்த கங்கை ஆதித்தனை கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கைது செய்தனர். இறுதியில் கைலி அணிய செய்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் திருநெல்வேலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications