PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு ப்ளாக் ஆயிடும்..ரேகை வைக்கலைனா காலி தான்
சென்னை: தமிழ்நாட்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் விவரங்களை புதுப்பிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, குடும்ப அட்டைகளில் பெயர் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் தங்களது கைவிரல் ரேகை (பயோமெட்ரிக்) விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தி வருகின்றன.
குறிப்பாக முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்கள் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பயோமெட்ரிக் பதிவு செய்யாதவர்கள் ஜூன் 25ஆம் தேதி காலக்கெடுவிற்குள் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் அளவு, குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.

ரேஷன் கார்டு
எனவே குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் சரியாக பதிவாகி இருப்பது அவசியம் என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். வேலை, கல்வி அல்லது பிற காரணங்களால் சொந்த ஊரை விட்டு வேறு மாவட்டங்கள் அல்லது வெளிமாநிலங்களில் தங்கி இருப்பவர்களும் தங்களது பயோமெட்ரிக் பதிவை மேற்கொள்ளலாம். "ஒரே நாடு - ஒரே ரேஷன் அட்டை" திட்டத்தின் கீழ், அவர்கள் தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் கைவிரல் ரேகையை பதிவு செய்யும் வசதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயோமெட்ரிக் பதிவு
குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யாரேனும் உயிரிழந்திருந்தால், அவர்களின் பெயர்களை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக வட்ட வழங்கல் அலுவலகத்தில் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். அல்லது சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடை விற்பனையாளரிடம் குடும்ப அட்டை எண் மற்றும் உயிரிழந்தவரின் ஆதார் அட்டை நகலை வழங்கி பெயர் நீக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் பொருட்கள்
போலி குடும்ப அட்டைகள், தவறான பயனாளர்கள் மற்றும் ரேஷன் விநியோக முறைகேடுகளை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் விளக்குகின்றனர். மேலும், மாநிலத்திற்கு வெளியே வசிப்போர் மற்றும் நீண்டகாலமாக ரேஷன் பொருட்களை பெறாதவர்களின் விவரங்களையும் சரிபார்க்க இந்த நடவடிக்கை உதவும் என கூறப்படுகிறது. எனவே குடும்ப அட்டையில் பெயர் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பித்து, தேவையான திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் எதிர்கால சிக்கல்களை தவிர்க்கலாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
KYC சரிபார்ப்பு
நாடு முழுவதும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் அடையாளங்களை சரிபார்த்து வைத்திருப்பது அவசியம் என மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. ஆதார் அடிப்படையிலான KYC சரிபார்ப்பு முறையின் கீழ், ரேஷன் கார்டுகளில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் விரல் ரேகை பதிவு செய்து உண்மை தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ளது.
அந்தியோதயா ரேஷன் கார்டு
ஆனால் இந்த பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், இன்னும் சுமார் 36 லட்சம் பேர் விரல் ரேகையை பதிவு செய்யாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், பெயர் நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாக அந்தியோதயா ரேஷன் கார்டு மற்றும் முன்னுரிமை ரேசன் கார்டு வைத்திருக்கும் பொதுமக்கள் உடனடியாக தாங்கள் உணவுப் பொருட்கள் வாங்கும் ரேசன் கடைகளில் விரல் ரேகை பதிவு மூலம் அடையாள சரிபார்ப்பை நிறைவு செய்ய வேண்டும் என மத்திய அரசும் வலியுறுத்தியுள்ளது.














Click it and Unblock the Notifications