கரூரில் ஓட்ட பாத்திரம்னு சொன்ன விஜய்.. டெல்லிக்கு சென்று அப்படி பேசினாரே.. திமுக பதிலடி!
கரூர்: திமுக ஆட்சியின் போது ஒரு ஓட்ட பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருந்திருக்கிறார்கள் என்பதை வெள்ளை அறிக்கை வெளிப்படுத்திவிட்டதாக முதல்வர் விஜய் கூறியுள்ளார். அதற்கு திமுக தரப்பில், அந்த ஓட்ட பாத்திரத்தில் ஒழுகிப்போன தண்ணீரை டெல்லிக்கு சென்று தமிழ்நாட்டின் சாதனைகள் என்று விஜய் பேசியது ஏன் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நிகழ்ந்து 10 மாதங்களுக்கு பின் முதல்வர் விஜய் மீண்டும் கரூர் மாவட்டம் வந்தார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து மீண்டும் பேசிய விஜய், கரூரில் தவெக சார்பாக நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் அண்மையில் அமைச்சர் மரியா வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கை தொடர்பாகவும் விஜய் பேசினார்.

அதில், தமிழக அரசு சார்பாக திமுக ஆட்சி பற்றி ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டோம். அதனை பற்றி சுருக்கமாக சொல்கிறேன். ஓட்டை பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றியுள்ளனர். தண்ணீர் எங்கே போனது என்று தெரியவில்லை. அது அவர்களுக்கு தான் வெளிச்சம் என்று சாடினார். இதற்கு திமுகவினர் விஜய்யின் பேச்சை வைத்தே பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அண்மையில் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசுகையில், சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற பொருளாதார சூழல்களுக்கு இடையிலும், இந்தியாவின் 2வது பெரிய பொருளாதாரமாக திகழும் தமிழ்நாடு, தனது தொடர்ச்சியான உறுதித்தன்மையையும், வளர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறது.
அதேபோல் இந்தியாவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 42% பெண்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். பெண் கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம், மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சி ஆகியவற்றையும் பேசினார். இதனால் திமுக ஓட்ட பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றியே தமிழ்நாடு இவ்வளவு வளர்ச்சியடைந்ததா என்று திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் கஜானா காலி என்று கூறி வரும் முதல்வர் விஜய், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் ஆகியவற்றை தொடர்ந்து வருகிறது. அதேபோல் மின்சாரத்துறைக்கு சுமார் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய திட்டங்களை விஜய் அறிவித்தார். இன்னொரு பக்கம் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் கஜானா காலி என்ற குற்றச்சாட்டும் பொய் என்றும் திமுகவினர் பதில் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications