அட்டென்ஷன் சீக்கர் பார்த்திபன்? பாண்டியராஜன் அந்த மெசேஜை அனுப்பினாரா? பாக்யராஜ் அசிஸ்டெண்ட்ஸ் மோதல்?
சென்னை: பாக்யராஜ்ஜின் உதவி இயக்குநர் ஒருவர் பார்த்திபனிடம், "நீ யார்? நீ எதுக்கு இதெல்லாம் முன்னே நின்று செய்துட்டு இருக்கே? நீ என்ன பாக்யராஜ் மகனா? உனக்கென்ன உரிமை இருக்கு? யாரையுமே நெருங்க விடாமல் எல்லா அட்டென்ஷனையும் எடுத்துக்குறியே? உனக்கு சீக்கிரம் சாவு வரும். உன் சாவுக்கு யாருமே வரமாட்டார்கள்" என ஹார்ஷான வார்த்தைகளால் சாபமிட்டு பார்த்திபனுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பியிருந்தார்.. அதை பற்றி பார்த்திபனும் ஊடகங்களில் பகிர்ந்திருந்தார்.. தற்போது இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் அந்தணன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ள அந்தணன், "பார்த்திபனுடைய அந்தப் பதிவை நானும் பார்த்தேன். 'உன்னுடைய சாவுக்கு ஒருத்தன் கூட வரமாட்டான்' என்று ஒரு நபர் விமர்சனம் முன்வைக்கிறார் என்றால், அவர் கண்டிப்பான முறையில் ஒரு தவறான நபராகத்தான் இருக்க முடியும். பார்த்திபனை விமர்சிப்பதற்கு அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை.

பாக்யராஜ் இறுதிச்சடங்கு
தனது குருநாதர் மறைந்துவிட்டார் என்ற காரணத்தினால், ஒரு நபர் ஆத்மார்த்தமாக அங்கு வேலை செய்கிறார். அதை ஒரு விளம்பரமாகப் பார்க்கின்ற பார்வையில் தான் தவறு இருக்கிறது..
பார்த்திபனைப் பொறுத்தவரை இவ்வளவு காலம் பாக்கியராஜ் சாரை எங்கேயுமே போய் பார்க்காமலோ அல்லது அவர் குறித்துப் பேசாமலோ இருந்துவிட்டு, அன்று அந்தச் சாவுக்கு வந்து மட்டும் அவ்வளவு சீன் போட்டிருந்தால் நீங்கள் கேட்கின்ற கேள்வி நியாயமானது. ஆனால் எனக்கு தெரிந்து, பார்த்திபன், எந்த மேடையில் ஏறினாலும் தன்னுடைய குருநாதரைப் பற்றி 2 வார்த்தைகள் பேசாமல் கீழே இறங்கியதே கிடையாது.
பார்த்திபனுக்கு வந்த மெசேஜ்
அப்படி எந்நேரமும் தன்னுடைய குருநாதரின் பெருமையைப் பல இடங்களில் பதிவு செய்துகொண்டே வருகின்ற ஒரு நபர், அவருடைய மரணத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அங்கு வந்து எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்வது என்பது உண்மையானது; ஆத்மார்த்தமானது. அதை வேறொரு பார்வையோடு பார்க்கின்ற நபரைத்தான் நான் தவறான நபராகப் பார்க்கிறேன்.
விமர்சனம் என்பதற்கு ஒரு தகுதி இருக்கிறது... ஒரு வார்த்தை இருக்கிறது. "நீதான் பாக்கியராஜைப் பெற்றாயா, நீதான் வளர்த்தாயா, எல்லா காரியங்களையும் நீ அங்கு முன்னின்று செய்கிறாய்" என்று மெசேஜ் அனுப்பியதாக சொல்கிறாரே, அவரும் பாக்கியராஜின் உதவி இயக்குனர் தானே? அப்படியென்றால் நீ அந்த வேலையைச் செய்ய வேண்டியதுதானே, உன்னை இங்கு யார் தடுத்தது? அங்கு பல பேர் ஓடியாடி வேலை பார்த்தார்கள், அதில் பார்த்திபனும் ஒருவர், அவ்வளவுதானே.
உள்ளபடியே உனக்கு அக்கறை இருந்திருந்தால், பார்த்திபனின் இடத்தில் இருந்து நீயும் அதைச் செய்திருக்க வேண்டியதுதானே, உன்னை யாரால் தடுத்திருக்க முடியும்?
எல்லா இடங்களிலும் யாராவது ஒருவர் நமக்கு இந்த வேலை கொடுக்கப்பட்டது என்று நினைத்து ஒரு காரியத்தைச் செய்யும்பொழுது, அதைக் கெடுப்பதற்கென்றே ஒரு சிலர் வருவார்கள்.
பாண்டியராஜன் - பார்த்திபன்
பார்த்திபன் அளவு கடந்த மரியாதையை ஒருவர் மீது வைத்திருக்கிறார். ஒருவேளை அவருடைய மறைவு நடக்கும் நேரத்தில், அங்கு போய் நிற்பதற்கே யாராவது ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று யோசிக்கத் தோன்றினால் அவர் என்ன செய்ய முடியும்? அதனால் ஒன்று நாமே செய்ய வேண்டும், இல்லையென்றால் செய்கிறவர்களையாவது அனுமதிக்க வேண்டும். இந்த ரெண்டுமே இல்லாமல் இப்படிப்பட்ட குழப்பங்களை ஏற்படுத்துகிறவர்கள்தான் கேவலமானவர்கள்.
இதில் பாண்டியராஜனை பொறுத்தவரை அவர் அப்படிப்பட்ட நபர் கிடையாது. அவருக்கும் பார்த்திபனுக்கும் ஏதோ பெரிய அளவில் வாய்க்கால் வரப்பு சண்டையெல்லாம் வந்ததே கிடையாது.. அவர்கள் 2 பேரும் நல்ல நண்பர்கள்தான். அதனால் பாண்டியராஜன் அப்படிச் சொல்லி இருப்பதற்கு 100 சதவீதம் வாய்ப்பு இல்லை..
யாரிந்த வேலையை பார்த்தது
பாக்கியராஜ் சாரிடம் நிறைய பேர் வேலை செய்தார்கள், அவருடைய கடைசி படம் வரை புதிய நபர்கள் பலரும் பணிபுரிந்திருக்கிறார்கள். அதில் யாராவது ஒருவர் சொல்லியிருக்கக் கூடுமே தவிர, பாண்டியராஜன் பேசியிருக்க வாய்ப்பில்லை.
பார்த்திபனை பொறுத்தவரை, அவர் எந்த மேடையை எடுத்துக்கொண்டாலும் அதில் அவர் குறித்து பேசுகின்ற அளவுக்கு ஒரு விஷயத்தை முன்வைப்பார். ஒரு 10 வரிகள் பேசுகிறார் என்றால் அதில் 8 வரிகள் ஸ்பெஷலாக இருக்கும். கொஞ்சம் புதுமையாக பேசுவார்.
இது இங்கு பலருக்கு அவர் ஏதோ ஒரு விளம்பரப் பிரியர் போலவும், எங்கு சென்றாலும் தன்னை முன்னிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது போலவும் தோன்றும். ஆனால், அதை அப்படி எடுத்துக்கொள்ள முடியாது. அவருக்கு என்று ஒரு தனித்துவ முத்திரை, அவரது முதல் படத்திலிருந்தே இருக்கிறது.
தனித்துவமான புதுமைவாதி பார்த்திபன்
அவர் எல்லா மேடைகளிலும் தன்னைத் தனித்துவமாகக் காட்ட வேண்டும் என்று செய்கிறார், அதில் ஒன்றும் தவறு இல்லையே.. சில பேர் அருவருக்கத்தக்க வகையில் கவனத்தை ஈர்க்க முயல்வார்கள், இவர் அப்படிப்பட்டவர் கிடையாது. இவர் ஒரு இலக்கியவாதியாகவும், கவிஞராகவும், இயக்குநராகவும் இருக்கிறார். அதனால், இவர் அவ்வளவு மலிவாக எந்த வேலையையும் எங்கும் செய்ததே கிடையாது.
அவருடைய செயல்பாடுகளையும் வார்த்தை அலங்காரங்களையும் ரசிப்பவர்கள் இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்காக அவர் சிரத்தை எடுத்து சில வார்த்தைகளைக் கொண்டு வந்து அங்கு பேசுகிறார். அதை தவறாக பார்க்கின்ற ஒரு கூட்டம் இங்கு இருக்கிறது, அந்தத் தவறான கூட்டம் செய்கின்ற வேலைதான் இது." என்றெல்லாம் காட்டமாக கூறியிருக்கிறார்.














Click it and Unblock the Notifications