விஜய்யின் திருச்சி கிழக்கு உட்பட.. 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த இடைக்கால தடை.. உயர் நீதிமன்றம்
சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட தமிழகத்தின் 7 சட்டமன்றத் தொகுதிகளில், 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை அறிவிக்க நீதிமன்றம் அதிரடியாக இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஜூலை 31ம் தேதி வரை இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு சட்டசபை தொகுதிகள் 7 காலியாக உள்ள நிலையில், இதுவரை அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இடைத்தேர்தல் அறிவிக்க இன்னும் கால அவகாசம் இருந்தாலும் கூட தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவிக்காமல் இருப்பதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

கடந்த ஜூலை 2-ம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட இடைத்தேர்தல் அறிவிப்பில் தமிழகத்தின் பெயரே இல்லாதது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் வியப்பில் ஆழ்த்தியது. தமிழ்நாட்டில் 6 சட்டசபை தொகுதிகள் காலியாக இருந்தும் கூட அதற்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவைச் சேர்ந்த சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், மரகதம் குமாரவேல், எஸ். ஜெயகுமார், பி. சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 6 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்துவிட்டு, முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த தொகுதிகளுக்கு இப்போது வரை இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
6 அதிமுக எம்எல்ஏக்கள்
அதிமுகவின் 6 முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் (விராலிமலை தொகுதி), எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர் தொகுதி) ஆகியோருடன் மரகதம் குமாரவேல் (மதுராந்தகம்), எஸ். ஜெயகுமார் (பெருந்துறை), பி. சத்யபாமா (தாராபுரம்) மற்றும் இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகிய 6 பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
இவர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை முறைப்படி சபாநாயகரிடம் சமர்ப்பித்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர். முன்னதாக விஜய் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதன் காரணமாக, திருச்சி கிழக்கு மற்றும் 6 அதிமுக எம்எல்ஏக்களின் தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 7 சட்டமன்றத் தொகுதிகள் தமிழ்நாட்டில் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டன.
இதனால் இந்த 7 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
நீதிமன்றத்தை நாடிய பொதுநல வழக்கு
இந்தச் சூழ்நிலையில் தான், நெல்லையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசரப் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த மனுவில் அவர் மிக முக்கியமான சட்ட அம்சங்களைச் சுட்டிக்காட்டியிருந்தார்.
ராஜினாமா செய்த முன்னாள் எம்எல்ஏக்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 பேரின் சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு எதிராக, ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் பல்வேறு தேர்தல் வழக்குகள்நிலுவையில் உள்ளதை அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இவர்களுக்கு எதிரான தேர்தல் முறைகேடு மற்றும் வெற்றிக்கு எதிரான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, இவர்கள் ராஜினாமா செய்துவிட்டார்கள் என்பதற்காக அந்தத் தொகுதிகளுக்கு அவசரமாக இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கக் கூடாது என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
இந்த பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, மனுதாரரின் வாதத்தில் உள்ள சட்டப்பூர்வ நியாயங்களை ஏற்றுக்கொண்டது. நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக அந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் தேதியை அறிவிப்பது சட்டச் சிக்கல்களை உருவாக்கும் என நீதிமன்றம் கருதியது.
இதனையடுத்து, தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேதியை அறிவிக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஜூலை 31ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதே நேரத்தில், எஞ்சிய 2 தொகுதிகளான மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகள் தொடர்பாக எந்தவொரு உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. ஏனெனில், இந்த இரு தொகுதிகளுக்கும் எதிராக எந்தவொரு தேர்தல் வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லை. இதனால் இந்த 2 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவதில் தற்போதைக்கு சட்டரீதியான தடைகள் ஏதும் இல்லை.














Click it and Unblock the Notifications