அடித்து தூக்கும் அம்மா உணவகங்கள்.. தினசரி வருகை 1.04 லட்சமாக அதிகரிப்பு.. காரணம் விஜய்யின் ஒரு மூவ்
சென்னை: தமிழ்நாட்டில் தவெக ஆட்சியின் வருகைக்கு பின் அம்மா உணவகங்கள் புனரமைக்கப்பட்டு மீண்டும் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தற்போது இதன் விளைவாக அம்மா உணவகத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் உயர்ந்து உள்ளது. தினசரி வருகை தருபவர்களின் எண்ணிக்கை 70,000 என்ற அளவிலிருந்து 1.04 லட்சமாக மிரள வைக்கும் வகையில் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஏழை, எளிய மற்றும் உழைக்கும் மக்களின் பசியைப் போக்கும் உன்னதத் திட்டமாக விளங்கும் அம்மா உணவகங்கள், தற்போது மீண்டும் தங்களின் பழைய பொலிவையும் மக்கள் செல்வாக்கையும் பெறத் தொடங்கியுள்ளன.

கடந்த ஆட்சி காலத்தில் குறைந்து வந்த அம்மா உணவகங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, தற்போது புதிய உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தரமான உணவு விநியோகம் காரணமாகத் தினசரி 1.04 லட்சமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.
சரிவிலிருந்து மீண்ட அம்மா கேன்டீன்
பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் மொத்தம் 383 அம்மா உணவகங்கள் தற்பொழுது தங்கு தடையின்றி செயல்பட்டு வருகின்றன. ஆரம்பக் காலகட்டங்களிலும், குறிப்பாகக் கோவிட்-19 பெருந்தொற்று ஊரடங்கு காலத்திலும், இந்த உணவகங்கள் லட்சக்கணக்கான மக்களுக்குக் பசியைப் போக்கின.
ஆனால், அதற்குப் பிறகு போதிய பராமரிப்பு இல்லாமை மற்றும் உணவின் தரம் சற்றுத் தொய்வடைந்ததன் காரணமாக, இங்கு வந்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.
ஒரு கட்டத்தில் தினசரி வருகை தருபவர்களின் எண்ணிக்கை 70,000க்கும் கீழ் சரிந்தது. இது ஏழை எளிய மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது.
விஜய் போட்ட அதிரடி உத்தரவு
மக்களின் இந்த அத்தியாவசியத் தேவையை உணர்ந்த முதலமைச்சர் விஜய், அம்மா உணவகங்களின் உள்கட்டமைப்பை உடனடியாக மேம்படுத்தவும், சமையலுக்குத் தேவையான புதிய நவீன உபகரணங்களைக் கொள்முதல் செய்யவும் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
ஏழை மக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் எக்காரணத்தைக் கொண்டும் குறையக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் இணை ஆணையர்கள் களத்தில் இறங்கினர். சென்னை முழுவதும் உள்ள பல்வேறு அம்மா உணவகங்களுக்கு நேரில் சென்று அவர்கள் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
உணவின் தரம், சமையலறை சுகாதாரம் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்ததன் விளைவாக, குறுகிய காலத்திலேயே உணவகங்களின் தரம் மிக உயர்வான நிலையை எட்டியுள்ளது.
ரூ. 17.6 கோடி மதிப்பீட்டிலான தரம் உயர்த்துதல்
அம்மா உணவகங்களின் இந்த இமாலய வளர்ச்சிக்குக் பின்னால் மிகப்பெரிய உழைப்பும் திட்டமிடலும் உள்ளன. இந்த உணவகங்களை நவீனமயமாக்கவும், பழுதடைந்த சமையல் பாத்திரங்களை மாற்றி புதிய உபகரணங்களை வாங்கவும் சுமார் 17.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டன.
தற்போது இந்த உணவகங்களில் சுமார் 3,000 பணியாளர்கள், முக்கியமாக மகளிர் சுய உதவிக்குழுவினர், பணியாற்றி வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்குத் தூய்மையான முறையில் உணவு வழங்கப்படுவதும் இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்குப் பிறகுதான், மக்கள் மத்தியில் அம்மா உணவகங்கள் மீதான நம்பிக்கை மீண்டும் அதிகரித்து, தினசரி வருகை தருபவர்களின் எண்ணிக்கை 70,000 என்ற அளவிலிருந்து 1.04 லட்சமாக மிரள வைக்கும் வகையில் உயர்ந்துள்ளது.














Click it and Unblock the Notifications