பல்லாயிரம் கோடி வசூல் முதலைகள்! சான்றிதழுக்கு ரூ.40 லட்சமா? சீமானுக்கு தவெக தந்த முதல் ரியாக்ஷன்
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் சாதகமாக செயல்படுவதாக சீமான் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதற்கு அமைச்சர் இப்போது பதிலடி தந்துள்ளார்.. இந்த பதிலடியானது, தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தவெக அரசு அமைந்த பிறகு சீமானின் தொடர் விமர்சனங்களுக்கு அந்த கட்சியிலிருந்து வந்துள்ள முதல் ரியாக்ஷன் இதுதான் என்பதால் அரசியல் களம் மறுபடியும் அனலடிக்க துவங்கி உள்ளது..!!
சமீபத்தில் தனியார் பள்ளி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், "தனியார் பள்ளிகள் நடத்துவது லாபக் கணக்கு அல்ல, புண்ணியக் கணக்கு.. அவர்கள் நகைகளை அடமானம் வைத்து மிகுந்த சிரமங்களுக்கு இடையே பள்ளிகளை நடத்துகிறார்கள்..

ஜூலை மாதம் முதல் தனியார் பள்ளிகளுக்கான உரிமங்களை 100 விழுக்காடு இணையதளம் மூலமாக எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார்.
நாம் தமிழர் கட்சி சீமான் கண்டனம்
இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருந்தார்.. அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கான அமைச்சர் மட்டும்தானா? அல்லது அரசு நடத்தும் பள்ளிகளுக்கும் அவர்தான் அமைச்சரா? தனியார் பள்ளிகள் உரிமம் பெறுவதை எளிதாக்கி அதனை ஊக்குவிப்பதற்குத்தான் அமைச்சர் ஆனாரா ராஜ்மோகன்? தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் நடத்துகிறது என்ற நினைவாவது அமைச்சர் ராஜ்மோகனுக்கு இருக்கிறதா?
தனியார் பள்ளிகள் எந்த அளவிற்கு பெற்றோர்களிடம் கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றன என்பதாவது அமைச்சருக்கு தெரியுமா? உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களை தடுத்து தனியார் பள்ளி முதலாளிகளுக்கு உதவிய அமைச்சர் ராஜ்மோகன், தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையைத் தடுத்து ஏழை, நடுத்தர வர்க்க பெற்றோர்களுக்கு உதவ எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
தனியார் பள்ளிகள் உரிமம்
தனியார் பள்ளிகளின் உரிமம் பெறுவதில் இருக்கும் ஊழல்களைக் களையவும், அவர்களின் வசதிக்காகவும் வேகமாக நடவடிக்கை எடுக்கும் அமைச்சர், தமிழகத்தில் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ள 25 ஆயிரம் அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தவோ, காலியாக உள்ள 18 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவோ எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தனியார் பள்ளிகளின் அதீத கட்டணக் கொள்ளையைத் தடுக்காமல், அவர்களின் லாபத்திற்காக தவெக அரசு உள்ளம் உருகுவது, இந்த அரசு கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கானதா அல்லது தனியார் பள்ளி முதலாளிகளுக்கானதா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. அமைச்சர் ராஜ்மோகன் இனியாவது தனியார் பள்ளிகள் மீது காட்டும் அக்கறையில் சிறிதளவையாவது அரசுப் பள்ளிகளைச் சீர்படுத்துவதில் செலுத்த வேண்டும்" என சீமான் வலியுறுத்தியிருந்தார்.
ராஜ்மோகன் அதிரடி பதிலடி
அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், "தனியார் பள்ளிகள் ஒவ்வொரு சான்றிதழுக்கும் 25 லட்சம், 40 லட்சம் என பணம் கொடுத்ததைத் தவிர்த்து, பல்லாயிரம் கோடி ஊழலைத் தவிர்த்ததை தனியார் பள்ளிக்கான அனுகூலமாகப் பார்க்கக் கூடாது. அந்த பார்வை தவறு. ஊழலுக்கு எதிரான நடவடிக்கையாகத் தான் இதைப் பார்க்க வேண்டும்.
ஊழல் முதலைகள்
மற்றபடி அரசு பள்ளிகள் தான் என்னுடைய கண்கள். அவற்றிற்குத் தான் எனது முக்கியத்துவம். நான் அமைச்சரானது போட்ட முதல் கையெழுத்தே, அரசுப் பள்ளிகளில் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைகளில் பூட்டக்கூடிய கதவு வசதி இருக்க வேண்டும் என்பதற்கானது தான்.
தனியார் பள்ளிகள் வசூல் வேட்டை ஊழலில் பெருமுதலைகள் வெளியே வருவது பிடிக்காமல் சீமான் அவர்களுக்கு ஆதரவாகப் பேசுவது போல் தெரிகிறது" என்று சீமானுக்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். தவெக தரப்பில் இருந்து வந்துள்ள இந்த முதல் ரியாக்ஷன் சீமான் தரப்பை யோசிக்க வைத்துள்ளதாகவே தெரிகிறது...!!














Click it and Unblock the Notifications