உங்களை அவமானப்படுத்தினால் தாங்கிக்க மாட்டோம்.. இடைத்தேர்தலில் நிற்காதீங்க! ஸ்டாலினுக்கு உதய் ஆலோசனை
சென்னை: இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் தொகுதிகளில் திருச்சி கிழக்கில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வ.வேலு ஆகிய இருவரும் கடுமையாக வலியுறுத்தி வருகின்றனர் என்பது கடந்த 3 வாரங்களாக எதிரொலிக்கும் செய்தி.
கடந்த ஜூலை 2, 2026 அன்று இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட இடைத்தேர்தல் அறிவிப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பீகாரின் பாங்கிபூர், குஜராத்தின் மஞ்ஜல்பூர், மத்தியப் பிரதேசத்தின் தாதியா ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு இடைத்தேர்தல்
இதோடு சேர்த்து தமிழ்நாட்டிலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில வாரங்களாக ஒட்டுமொத்த இந்திய அரசியலையும் உற்று நோக்க வைத்த தமிழகத்தின் 6 தொகுதி காலியிடங்கள் இந்த பட்டியலில் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவைச் சேர்ந்த சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், மரகதம் குமாரவேல், எஸ். ஜெயகுமார், பி. சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 6 முக்கிய எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.
தமிழ்நாடு சட்டசபை காலி இடங்கள்
முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்காக இந்த அதிரடி முடிவை அவர்கள் எடுத்தனர். இவர்களின் கைப்பட எழுதப்பட்ட ராஜினாமா கடிதங்களைச் சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் மிக வேகமாக ஏற்றுக்கொண்டார்.
முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியையும் சேர்த்து மொத்தம் 7 இடங்கள் காலியாக உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் ஏன் இங்கு தேர்தலை அறிவிக்கவில்லை என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
ஸ்டாலின் போட்டி
இந்த நிலையில்தான் இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் தொகுதிகளில் திருச்சி கிழக்கில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வ.வேலு ஆகிய இருவரும் கடுமையாக வலியுறுத்தி வருகின்றனர் என்பது கடந்த 3 வாரங்களாக எதிரொலிக்கும் செய்தி.
ஸ்டாலினின் மனைவி துர்கா அம்மையாரும், தனது கணவர் எம்.எல்.ஏ.வாக சட்டப்பேரவைக்குள் செல்ல வேண்டும் என்று விரும்புவதும் பழைய செய்தி. ஆனால், திருச்சி கிழக்கில் போட்டியிடாமல், திருவாரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வை ராஜினாமா செய்ய வைத்து திருவாரூரில் போட்டியிட வேண்டும் என்று துர்கா ஆசைப்படுகிறார். சமீப நாட்களாக இது குறித்து ஸ்டாலினிடம் வலியுறுத்தியும் வருகிறார் துர்கா.
ஸ்டாலின் தம்பதியர்கள் துபாய் வழியாக கடந்த 4-ந்தேதி லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றனர். லண்டனுக்கு செல்வதற்கு முதல் நாள், ஸ்டாலின் இல்லத்தில் உதயநிதி உள்பட அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தார் ஸ்டாலின். மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது பற்றி விவாதிக்கப்பட்டிருக்கிறது. அப்போது பேசிய உதயநிதி, ''மீண்டும் போட்டியிடுவதை அப்பா தவிர்க்க வேண்டும். தற்போதைய சட்டப்பேரவை நீங்கள் நினைப்பது மாதிரி, நீங்கள் நடத்தியது மாதிரி ஆரோக்கியமாக இல்லை. மீண்டும் நீங்கள் பேரவைக்குள் வந்தால் உங்களை அவமானப்படுத்தும் நிகழ்வுகள் நடக்கும். அப்படிப்பட்ட ஆட்சி தான் இப்போது இருக்கிறது.
உங்களை அவமானப்படுத்தும் பேச்சுக்கள் ஆளும் கட்சி தரப்பிலிருந்து வந்தால் திமுகவினர் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள். விரும்பத்தகாத பல விசயங்கள் நடந்து விடும். அதனை அப்படியே திமுக மீது பழிப்போட்டு அரசியல் ஆதாயம் தேடிக்கொள்ள தற்போதைய ரீல்ஸ் ஆட்சி முயற்சிக்கும். எப்படி தாக்கினால் நாம் உணர்ச்சி வயப்படுவோம் என்பதை தெரிந்து வைத்துக்கொண்டு சீண்டிப்பார்ப்பார்கள். அதனால் இடைத்தேர்தலில் நீங்கள் போட்டியிட வேண்டாம்'' என்று சொல்லி யிருக்கிறார்.
உதயநிதியின் அந்த யோசனைதான் தற்போது ஸ்டாலின் தம்பதியினரிடம் இருப்பதாகத் தெரிகிறது. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தான் , தலைவர் (ஸ்டாலின்) போட்டியிடுகிறாரா? தவிர்க்கிறாரா? என்பது உறுதியாக தெரியவரும் என்கிறது அறிவாலய வட்டாரம்.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications