தமிழகத்தில் பறிபோன 600 எம்பிபிஎஸ் இடங்கள்.. அமைச்சர் அருண்ராஜ் கொடுத்த விளக்கம்
சென்னை: தமிழகத்தில் 6 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக அந்தஸ்து பெறுவதால் மாநில ஒதுக்கீட்டில் சுமார் 600 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ள சூழலில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதே இதற்கான நிரந்தரத் தீர்வு என்றும், கடந்த ஆட்சியில் 4 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட என்ஓசிக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது: எம்எம்சியில் உள்ள ஒவ்வொரு கழிவறைக்கு முன்பும் கியூஆர் கோடு வைக்கப்பட்டுள்ளது. கழிவறையைப் பயன்படுத்தும் நோயாளிகள் அல்லது உறவினர்கள் அந்த கழிவறை தூய்மையாக இல்லையெனில், இந்த கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் "இந்த கழிவறை சுத்தமாக இருக்கிறதா, இல்லையா" என்கிற கேள்வி வரும். அதில், இல்லை என்று நீங்கள் கிளிக் செய்தால் உடனடியாக 10 நிமிடத்திற்குள் அந்த கழிவறை சுத்தம் செய்யப்பட்டு அந்த ரிக்வஸ்ட் க்ளோஸ் செய்யப்படும்.

இல்லையெனில், அடுத்த 15 நிமிடத்திற்குள் புளோர் சூப்பர் வைஸருக்கும், அடுத்த 30 நிமிடத்திற்குள் மருத்துவமனையின் டீனின் மொபைல் எண்ணிற்கும் அலாரம் செல்லும். எம்எம்சி இந்தப் புதிய முயற்சியை எடுத்துள்ளதற்கு மனமார்ந்த பாராட்டுகள். எம்எம்சியில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
தொடர்ந்து, தமிழகத்தில் 6 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக தரம் உயர்வதால் மாநில ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பறிபோன 600 இடங்கள் குறித்த கேள்விக்கு அமைச்சர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் பதிலளிக்கையில், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதே இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு.
மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றதால் அரசு இட ஒதுக்கீட்டை பின்பற்றுவதில்லை. 4 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு கடந்த ஆட்சியில் என்ஓசி வழங்கியதற்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications