காற்றையே ஏமாற்றும் கட்டிடம்.. புர்ஜ் கலீபாவின் இந்த ₹12,000 கோடி ரகசியம் உங்களுக்கு தெரியுமா!
துபாய்: உலகின் உயரமான கட்டடம் என்ற பெருமையை தன் வசம் வைத்திருக்கும் புர்ஜ் கலீபா, ஏதோ ஒரே நாளில் உருவான அதிசயம் அல்ல. எதுவுமே இல்லாத பாலைவனப் பகுதியில் இருந்து தொடங்கிய அதன் கட்டுமானம் 828 மீட்டர் என்ற உச்சத்தை தொட்டது. இதை அமீரகம் கவனமாக திட்டமிட்டுச் சாதித்தது எப்படி என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
உலகிலேயே மிக உயரமான கட்டிடமாக இருக்கும் புர்ஜ் கலீபா, துபாயின் முக்கியமான அடையாளமாக இருக்கிறது. சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு, இன்னுமே உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற சாதனையை தனது வசம் வைத்திருக்கிறது. இந்த புர்ஜ் கலீபா ஒரே நாளில் சாத்தியமாகவில்லை. இதற்கு பின்னால் பல ஆண்டுகள் திட்டமிடலும், பல ஆயிரம் பேரின் கடின உழைப்பும் இருக்கிறது.

புர்ஜ் கலீபா- டைம் லைன்
- ஜனவரி 6, 2004 - துபாய் டவுன்டவுன் பகுதியில் முதற்கட்ட பணிகள் தொடங்கின.
- மார்ச் 21, 2005 - அடித்தளம் அமைக்கும் பணிகளுடன் கட்டுமானம் தொடங்கியது.
- ஜூன் 2006 - மளமளவென நடந்த கட்டுமானம், 50 மாடிகளைக் கடந்தது.
- பிப்ரவரி 2007 - அப்போது உலகின் உயரமான கட்டடமாக இருந்த தைபே 101 கட்டிடத்தின் உயரத்தை முந்தியது.
- ஜூலை 2007 - 512 மீட்டர் உயரத்தைக் கடந்து, சி.என் டவரை முந்தியது. உலகின் உயரமான தனித்து நிற்கும் கட்டிடமாக மாறியது.
- செப்டம்பர் 2007 - 555 மீட்டர் என்ற சாதனை உயரத்தை எட்டியது.
- ஏப்ரல் 2008 - மனிதனால் உருவாக்கப்பட்ட மிக உயரமான கட்டுமானம் என்ற சாதனையை படைத்தது.
- ஜனவரி 17, 2009 - உச்சியில் ஸ்டீல் கோபுரம் பொருத்தப்பட்ட நிலையில், 828 மீட்டரை எட்டியது.
- அக்டோபர் 1, 2009 - இதர பணிகள் மற்றும் இன்டூர் பணிகள் நிறைவடைந்தன.
- ஜனவரி 4, 2010 - கட்டிடம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. அமீரகத்தின் முன்னாள் அதிபர் கலீபா பின் சயீத் அல் நஹ்யானின் நினைவாக "புர்ஜ் கலீபா" என பெயரிடப்பட்டது.
நிதியுதவி
புர்ஜ் கலீபா கட்டுமானத்திற்கு ஒட்டுமொத்தமாக சுமார் 1.5 பில்லியன் டாலர், அதாவது தற்போதைய மதிப்பில் ரூ.12,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டது. 2005ல் மஸ்ஹரிக் பேங்க் (Mashreq Bank), எமிரேட்ஸ் பேங்க் இன்டர்நேஷனல், அபு தபி கமர்ஷியல் பேங்க் ஆகியவை இணைந்து இதற்கு பைனான்ஸ் செய்தது. கட்டுமானப் பணிகளைத் தென் கொரியாவின் சாம்சங் சி&டி நிறுவனம், BESIX மற்றும் அரப்டெக் (Arabtec) நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொண்டது.
இந்த கட்டுமானம் நடைபெறும்போதே பலரும் இதில் குடியிருப்பை வாங்க ஆர்வம் காட்டினர். பலரும் போட்டிப் போட்டுக் கொண்டு புக் செய்ததால்.. கட்டுமானம் முடிவடையும் முன்பே வீடுகள் மற்றும் ஆபீஸ் ஸ்பெஸ்கள் சுமார் 90 சதவீதம் புக் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டன. அதாவது எதிர்காலத்தில் யார் அந்த வீடு அல்லது குடியிருப்பிற்கு வருவார்களோ அவர்களின் முதலீடுகளே பெரும்பாலான கட்டுமான செலவுகளை சமாளிக்க உதவின.
வடிவம்
புர்ஜ் கலீபா கட்டிடத்தை நீங்கள் தள்ளி இருந்தால் பார்த்தாலே அவ்வளவு அழகாக இருக்கும். அதேநேரம் அதன் வடிவமைப்பு என்பது வெறும் அழகிற்காக உருவாக்கப்பட்டது இல்லை. அவை முழுமையாக பொறியியல் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த SOM என்ற நிறுவனம் புர்ஜ் கலீபாவை வடிவமைத்தது. மூன்று கிளைகளை கொண்ட "Y" வடிவிலான இந்த கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியும் மற்ற பகுதிகளுக்கு சப்போர்ட்டாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டது.. இந்த அமைப்பு கட்டிடத்திற்கு வலுவான அடித்தளத்தையும், அதிக உயரத்திலும் நிலைத்தன்மையையும் வழங்குகிறது.
ரொம்ப முக்கியம்
பொதுவாகவே ஒரு கட்டிடம் உயரமாகச் செல்ல செல்ல காற்றின் தாக்கமும் அதிகரிக்கும். எனவே, கொஞ்சம் வேகமாகக் காற்று அடித்தால் கூட அது ஒட்டுமொத்த கட்டிடத்தையும் ஆட்டுவிக்கும் ஆபத்து இருக்கிறது. இதைச் சமாளிக்க SOM நிறுவனம் ஒரு தனித்துவமான யுக்தியை பயன்படுத்தியது. அதாவது கட்டிடம் மேலே செல்ல செல்ல ஒரே வடிவத்தில் இல்லாமல், வெவ்வேறு இடைவெளிகளில் கட்டிடம் வடிவமைக்கப்பட்டது. இதனால் காற்று ஒரே இடத்தில் மோத முடியாது. அதாவது ஸ்டீல் கான்கரீட் மட்டுமின்றி, இந்த பக்காவான திட்டமும் தான் புர்ஜ் கலீபாவை இன்னும் காப்பாற்றுகிறது.
காற்றை ஏமாற்றும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த வடிவமைப்பை இப்போதும் இந்த ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான கட்டிடத்தை பாதுகாத்து வருகிறது. பாலைவன மணலில் தொடங்கிய இந்த பிரம்மாண்டம், இன்று உலகின் மிகப் பெரிய பொறியியல் சாதனைகளில் ஒன்றாகவும் துபாயின் ஐக்கானகவும் இன்னுமே கம்பீரமாக நிற்கிறது.!














Click it and Unblock the Notifications