"தில் இருக்கா, ஒரு ****** உம் கிடையாது".. கரூரில் விஜய் பேச்சு குறித்து ஜெயக்குமார் பதிலடி
சென்னை: மீண்டும், மீண்டும் தனது தவறை உணராமல் காவல்துறை மீது பழி போடுவது, பஞ்ச் டயலாக் அடிப்பது, "தில் இருக்கா, திராணி இருக்கா, ஒரு ****** உம் கிடையாது" என்று அநாகரீகமாக பேசுவது போன்ற தனது டிரேட் மார்க் பேச்சுக்களையும் வெளிப்படுத்தியுள்ளார் முதல்வர் விஜய் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
கரூரில் இன்று காலை முதல்வர் விஜய் பேசும் போது, என் நெஞ்சில் குடியிருக்கும் கரூர் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு மனிதன் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் மனதளவில் காயங்கள், வலிகளை மறக்க முடியாது. நிறைய வலிகள், காயங்களை தாண்டித்தான் வந்தேன். கரூர் சம்பவம்தான் எனக்கு அதிக மனவலியை கொடுத்தது. என் அக்கா தங்கைகளை கரூரில் இழந்தேன்... கள்ளங்கபடமற்ற குழந்தைகளை இழந்தேன். என் மனதின் ஆறாத காயம் கரூர் சம்பவம்.

பெரம்பலூர் செல்லும் முன் கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு செல்ல வேண்டாம் என போலீஸ் கூறியது; நாமக்கல்லில் இருந்து கரூர் வந்தபோது அங்கிருந்த காவல் துறை எங்களை அலர்ட் செய்யாதது ஏன்?. நெடுஞ்சாலையில் இருந்து எங்களை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்து விட்டது போலீஸ்தான்; இப்படி நடந்தால் அப்படி செய்யுங்கள், அப்படி நடந்தால் இப்படி செய்யுங்கள் எனச்சொல்லி பிரஷர் போட்டது யார்?. போலீஸ் நினைத்திருந்தால் கரூர் நிகழ்ச்சியையே கேன்சல் பண்ணியிருக்கலாம். ஆனால், அந்த போலீஸே எங்களை ஹைவேஸ்ல இருந்து அந்த இடத்துக்கு கூட்டிட்டு போன நாடகம் இருக்கு பாருங்க. அதை நான் நம்பிட்டேன். அதனால்தான் கூட்டத்தில் போலீஸுக்கு நன்றி எல்லாம் சொன்னேன்''
"வலியோடு இருந்த என்னை ஓடி ஒளிந்துவிட்டேன் என என்னைக் கூறுவதா?. பணமா? ஜனமா? என என்னைக் கேட்டால், ஜனம்தான் முக்கியம் என நான் கூறுவேன். அதை விட எனக்கு வேறு எதுவும் முக்கியமில்லை. நம்ம எல்லோருக்கும் இத்தனை வலிகள், காயங்கள் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள்; ஆனால், அது மட்டும் போதாது மக்களே... எழுந்திருக்கவே முடியாத அளவிற்கு நிரந்தரமான பதிலடி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
மக்கள் அமைத்துக் கொடுத்த அரசு மீது டிசைன் டிசைனாக குறை மட்டும் கூறுவார்கள்; தீய சக்தியும், தீர்ந்த சக்தியும் 'பார்ட்டி பண்ட்' என்ற பெயரில் அனைத்து துறைகளிலும் கொள்ளை; சட்டசபையில் பார்ட்டி பண்ட் என கூறியதும் எடுத்தார்கள் பாருங்கள் ஒரு ஓட்டம்; குற்றம் உள்ள நெஞ்சம் தான் குறுகுறுக்கும்.
நமக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்த, நமக்கு எதிரான சதிய, சூழ்ச்சியை இனி வரும் தலைமுறைக்கு தெரியப்படுத்த கரூரில் தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும். "ரீல் அல்ல ரியல் தாய்மாமன்".. அறிஞர் அண்ணா பிறந்தநாளன்று தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம் அறிமுகம் செய்யப்படும். என்னை பார்த்து வாயை திறங்க சிஎம்' என்கிறார்கள். உங்களது முதல்வரை நெஞ்சில் குத்திவிட்டு வந்தது வேற லெவல். பேசுங்கள் என்கிறீர்கள். பேசினால் எழுந்து ஓடி விடுகிறார்கள்.இனிமேல் சபாநாயகரிடம் சொல்லி கதவுகளை மூடச் சொல்லி பேச வேண்டியதுதான். 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டோ போட்டு விட்டார்கள். இதற்கு மேலே பேசினால் மொத்தமாக முடிந்துவிடும்" இவ்வாறு பல்வேறு விஷயங்கள் குறித்து விஜய் பேசியிருந்தார்.
இதற்கு பதில்அளிக்கும் வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில், "கரூர் சென்றுள்ள முதல்வர், வழக்கம் போல தன் வசன கர்த்தா குடுத்த ஸ்கிரிப்டை முழங்கி தள்ளியுள்ளார். என் நெஞ்சில் நீங்காமல் இருக்கும் கரூர் மக்களை சந்திக்க போகிறேன் என்று சொன்ன முதல்வர், உண்மையில் இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்யவே கரூர் சென்றிருக்கிறார். மேலும் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்று அள்ளி தந்த கவர்ச்சி வாக்குறுதிகளை மீண்டும் ஒருமுறை வாக்குறுதியாக கொடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, மீண்டும், மீண்டும் தனது தவறை உணராமல் காவல்துறை மீது பழி போடுவது, பஞ்ச் டயலாக் அடிப்பது, "தில் இருக்கா, திராணி இருக்கா, ஒரு ****** உம் கிடையாது" என்று அநாகரீகமாக பேசுவது போன்ற தனது Trademark பேச்சுக்களையும் வெளிப்படுத்தியுள்ளார் முதல்வர்.
நான் மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன் என்று சொல்லும் முதல்வருக்கு, தன்னை பார்க்க வந்து இறந்தவர்களுக்கோ அவரது குடும்பத்தாருக்கோ பொதுவெளியில் ஒரு மன்னிப்பு கேட்க கூட மனது வருவதில்லை. மாறாக, தங்களை நம்பி மாற்றத்திற்கான அரசியலை நோக்கி வரும் மக்களை உசுப்பேத்தி ரசிக மனநிலையிலேயே வைத்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்.
மேலும், தீர்ந்து போன சக்தியில் இருந்து குதிரை பேரத்தில் ஆள் பிடிக்கும் முதல்வர் அவர்களே, Party Fund பற்றி பேசினால் திமுக ஓடுவது உண்மைதான். ஆனால், உங்கள் Party யினர் செய்யும் முறைகேடுகள் நாளொறு வண்ணம் செய்திகளில் வருவதை நீங்கள் பார்ப்பதில்லையோ!? முடிந்தால் பாருங்கள்..
நடிகரை பார்க்க வந்து இறந்தவர்களுக்கு நினைவு மண்டபம், உறவினர்களுக்கு அரசு வேலை. What bro, it's very wrong bro!!" #(ஏ)மாற்றம்" இவ்வாறு ஜெயகுமார் கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications