சத்யான்னு கூப்பிட்டதுமே டக்னு திரும்பிய விஜய்.. ஒரே கைதட்டல்.. கரூரில் கெத்து காட்டிய தவெக எம்எல்ஏ
கரூர்: கரூரில் நடந்த தவெக மக்கள் சந்திப்பு கூட்டத்தில், ஒட்டுமொத்த மேடையையும் தங்கள் பக்கமாகத் திருப்பியிருக்கிறார்கள் 2 பெண்கள்... ஒருவர், வரவேற்புரை ஆற்றிய பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி. இன்னொருவர், பாரதியாரின் கவிதையைப் பாடி கூட்டத்தையே அதிரவைத்த கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ சத்யா. யார் இவர்கள்?
இன்றைய கரூர் கூட்டத்தில் முதலமைச்சர் விஜயை வரவேற்றுப் பேசியவர் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி... இவர் கோவையின் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.

அமைச்சர் விஜயலட்சுமி
பிழைப்பிற்காகக் குமாரபாளையம் பகுதிக்குக் குடிபெயர்ந்து, அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் கணக்காளராக வேலை பார்த்தார். விஜய் மேல் இருந்த ஈர்ப்பால் ரசிகர் மன்றத்தில் இணைந்து, பிறகு தவெகவின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராக உயர்ந்தார்.
கடந்த தேர்தலில் அதிமுகவின் மிக முக்கியப் புள்ளியான முன்னாள் அமைச்சர் தங்கமணியை, அவருடைய சொந்தக் கோட்டையான குமாரபாளையத்தில் எதிர்த்து நின்றார் விஜயலட்சுமி.
வளர்ச்சி திட்டங்கள் கரூருக்கு
அரசியல் பலம், பண பலம் என எதுவுமே இல்லாத நிலையிலும், தங்கமணியை விட 8,000 வாக்குகள் அதிகம் பெற்று மாஸ் வெற்றி பெற்றார். சாமானிய பெண்ணாக இருந்தவர், இன்று தமிழகத்தின் பால்வளத்துறை அமைச்சராக முதலமைச்சரை வரவேற்றுப் பேசி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
"எளிமை, நேர்மை, வேகம், மக்கள் நலன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தி வரும் தங்களின் தலைமையில், கரூர் மாவட்டமும் புதிய வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது. இந்த வருகை எங்கள் மாவட்ட வளர்ச்சிக்கு மேலும் பல புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என்று அமைச்சர் விஜயலட்சுமி சொன்னதுமே கரகோஷம் விண்ணை பிளந்தது.
யார் இந்த எம்.எல்.ஏ சத்யா?
அதேபோல, இன்றைய கூட்டத்தில் பாரதியாரின் வரிகளைப் பேசி அதிரடி காட்டியவர் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சத்யா... கரூர் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த ஓர் எளிய நடுத்தரக் குடும்பத்துப் பெண். இவருடைய அப்பா ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்,.. கல்வியில் ஆர்வம் கொண்ட சத்யா, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ முடித்துவிட்டு, கல்வியியல் நிறுவனத்தில் எம்.எட் பட்டமும் பெற்றார். தனியார் பள்ளியில் தமிழாசிரியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர்.
இளம் வயதிலேயே கணவரை இழந்துவிட்ட சத்யா, தருண்யாஸ்ரீ, தருண் என்ற இரண்டு பிள்ளைகளை வளர்த்து வரும் சிங்கிள் மதர் ஆவார். எத்தனையோ வாழ்க்கைப் போராட்டங்களுக்கு மத்தியிலும், விஜய் மீது கொண்ட ஈர்ப்பால் அவரது ரசிகர் மன்றத்தில் பல வருடங்களாகவே அடிமட்டத் தொண்டராகச் செயல்பட்டு வந்தார்.
கிருஷ்ணாபுரம் எம்எல்ஏ
விஜய் மக்கள் இயக்கம் தொடங்கியபோதும்சரி, அது தமிழக வெற்றிக் கழகமாக மாறியபோதும் சரி, தனது கிருஷ்ணராயபுரம் தொகுதியில் கட்சியை பலப்படுத்த சத்யாவின் உழைப்பு அதிகமானது.. உதவி என்று கேட்டு வருபவர்களுக்குத் தன்னால் முடிந்தவற்றை செய்து கொடுத்து, தொகுதி மக்களிடம் சீக்கிரத்திலேயே நல்ல பெயர் எடுத்தார்.
இந்த உழைப்புதான், கிருஷ்ணராயபுரம் தனித் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை தந்தது. 1967-ல் இருந்து திராவிட கட்சிகள் மட்டுமே மாறி மாறி வெற்றி பெற்ற பாரம்பரியமிக்கத் தொகுதியில், 62,378 வாக்குகள் பெற்று அதிமுகவை இரண்டாம் இடத்திற்கும், திமுகவை 3ம் இடத்திற்கும் தள்ளினார்.
விஜய் என்ற ஒற்றை முகம்
ஒரு சேனலுக்கு சத்யா பேட்டி தந்தபோது, "தொகுதி மக்கள் பலருக்கு என்னை யார் என்றே தெரியாது. ஆனால், "234 தொகுதிகளிலும் நான்தான் உங்கள் விஜய், எனக்கு வாக்களியுங்கள்" என்று தலைவர் சொன்ன ஒரே ஒரு வார்த்தைதான் மந்திரமாக வேலை செய்தது. இது தனிமனிதராக விஜய்யின் முகத்திற்கு கிடைத்த வெற்றி. ஆளும் தரப்பு மீது இருந்த அதிருப்தியால் மக்கள் 'விசில்' சின்னத்திற்கு வாக்களித்துள்ளனர் என்று உருக்கமாக பேசியிருந்தது நினைவிருக்கலாம்.
இன்றைய தினமும் கரூர் கூட்டத்தில் சத்யாவின் பேச்சு அசரடித்தது.. "ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. கொக்கு எப்படி தனக்கான வாய்ப்பு வரும் வரை காத்திருக்குமோ, அதேபோல் தமிழக மக்களும் தங்களுக்கு ஒரு வாய்ப்பு வரும் என்று காத்திருந்தனர். அப்படிப்பட்ட வாய்ப்பு தான் நம்முடைய முதலமைச்சர் விஜய். இந்த வாய்ப்பை எபோதுமே கை நழுவவே விட மாட்டோம்..
வீழ்வேன் என்று நினைத்தாயோ
தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்களிடம் நாங்கள் பல கேள்விகளை கேட்டோம்.. ஆனால் ஒரே பதில்தான் கிடைத்தது.. விசில் ஆட்சி வரவேண்டும் என்பதே அந்த பதில்.
தளபதிக்கு, பாரதியாரின் வரிகள் ஒன்று எப்போதும் பொருத்தமானதாக இருக்கும். "பல வேடிக்கை மனிதரை போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ."என்று சத்யா பேசப்பேச கைதட்டல்கள் கரூரில் அதிர்ந்தது.
பணமும் அதிகாரமும் மட்டுமே அரசியலை தீர்மானிக்கும் என்ற பிம்பத்தை உடைத்து, உழைப்பும் எளிய பின்னணியும் இருந்தால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டி, கரூரின் "சிங்கப்பெண்" லிஸ்ட்டில் இணைந்திருக்கிறார்கள் இந்த இரண்டு தவெக பெண் ஆளுமைகளும்....!!!














Click it and Unblock the Notifications