ரயில் பயணிகளே உஷார்.. இனி டிஜிட்டல் டிக்கெட் ஸ்கிரீன்ஷாட், PDF காட்டினால் அபராதம்! வந்தது புதிய விதி
சென்னை: டிஜிட்டல் டிக்கெட்களில் புதிய விதிமுறைகளை ரயில்வேதுறை அறிமுகம் செய்துள்ளது. ரயில் பயணிகள் இனி ஸ்கிரீன்ஷாட்களை டிஜிட்டல் டிக்கெட்டுகளாக காட்ட முடியாது.
இந்திய ரயில்வே துறை டிஜிட்டல் அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகளுக்கான புதிய கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி, ரெயில் ஒன் மொபைல் செயலி மூலம் எடுக்கப்படும் பொதுப்பிரிவு டிக்கெட்டுகளின் ஸ்கிரீன்ஷாட்கள், பிடிஎஃப் பிரதிகள் அல்லது வாட்ஸ்அப் மூலம் பகிரப்படும் டிக்கெட்டுகள் இனி பயணத்தின் போது செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செயலியில் இருக்கும் அசல் டிக்கெட்டை மட்டுமே பரிசோதனையின் போது காண்பிக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் டிக்கெட்டுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது அன் ரிஸர்வ்ட் ரயிலுக்கான டிஜிட்டல் டிக்கெட்டுக்கு மட்டும் இந்த விதி பொருந்தும். நீங்கள் புக் செய்யும் ரிசர்வ் ரயிலுக்கு இது பொருந்தாது.
எந்தெந்த டிக்கெட்டுகள் செல்லாது?
ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்கத்தின்படி, டிஜிட்டல் முறையில் புக் செய்யப்படும் பொதுப்பிரிவு டிக்கெட்டுகள், எந்த மொபைல் எண்ணில் பதிவு செய்யப்பட்டு புக் செய்யப்பட்டதோ, அதே மொபைலில் உள்ள ரெயில் ஒன் செயலியில் மட்டுமே காட்டப்பட வேண்டும்.
டிக்கெட்டின் ஸ்கிரீன்ஷாட்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
டிக்கெட்டுகளின் புகைப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
பிடிஎஃப் பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
வாட்ஸ்அப் அல்லது இதர மெசேஜிங் செயலிகள் மூலம் அனுப்பப்படும் டிக்கெட்டுகளும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
இதனை மீறி ஸ்கிரீன்ஷாட் அல்லது வாட்ஸ்அப் பிரதிகளைப் பயணத்தின் போது காண்பித்தால், அவர்கள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களாகக் கருதப்பட்டு, அபராதம் விதிக்கப்படும்.
சிக்கிய பயணி
இந்த புதிய விதிமுறை அமலாக்கத்திற்குப் பின்னால் நடந்த ஒரு முக்கியச் சம்பவம் கவனம் பெற்றுள்ளது. கோர்பா - விசாகப்பட்டினம் லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோர்பா முதல் ராய்ப்பூர் வரை பயணித்த ஒரு பெண் பயணி, டிக்கெட் பரிசோதகரிடம் தனது வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட்டை காண்பித்துள்ளார்.
அவரது சகோதரர் தனது மொபைலில் உள்ள ரெயில் ஒன் செயலி மூலம் டிக்கெட் எடுத்து, அதனை வாட்ஸ்அப்பில் அனுப்பியதாக அந்தப் பெண் கூறியுள்ளார். ஆனால், டிக்கெட் பரிசோதகர் அதனைச் சரிபார்த்தபோது, அந்த ரயில் கோர்பா நிலையத்திலிருந்து மாலை 4:10 மணிக்கு புறப்பட்டுவிட்டது, ஆனால் அந்த டிஜிட்டல் டிக்கெட்டோ மாலை 4:45 மணிக்குத்தான் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும், அந்தப் பயணியின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலும் அந்த டிக்கெட் இல்லை. இதனால் அந்த ஸ்கிரீன்ஷாட் செல்லாது என அறிவிக்கப்பட்டு, அந்தப் பெண்ணுக்கு ரயில்வே விதிகளின்படி உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டது.
ரயில் புறப்படுவதற்கு முன் எடுக்க வேண்டும்
டிஜிட்டல் அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகளைப் பொறுத்தவரை, ரயில் புறப்படும் நிலையத்திலிருந்து கிளம்புவதற்கு முன்பாகவே டிக்கெட் புக் செய்யப்பட வேண்டும் என்பதை ரயில்வே மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. ரயில் நிலையத்தை விட்டுப் புறப்பட்ட பிறகு எடுக்கப்படும் எந்தவொரு டிக்கெட்டும், அது ரெயில் ஒன் செயலியில் காட்டப்பட்டாலும் கூட, செல்லாததாகவே கருதப்படும்.
டிக்கெட் புக் செய்யப் பயன்படுத்திய மொபைல் போனை முழு பயணத்தின் போதும் உங்களுடனேயே வைத்திருக்க வேண்டும்.
பயணத்தின் போது மொபைல் போனில் போதிய சார்ஜ் (Battery Charge) இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
பயணம் தொடங்குவதற்கு முன் நிலையத்தின் பெயர், பயணத் தேதி மற்றும் பிற விவரங்களைச் சரியாகச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
ஸ்கிரீன்ஷாட்கள் அல்லது ஃபார்வர்டு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் மூலமாகப் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
Reservation டிக்கெட்டுகளுக்கு இது பொருந்துமா?
இந்த புதிய விதிகள் அனைத்தும் ரெயில் ஒன் செயலி மூலம் புக் செய்யப்படும் டிஜிட்டல் அன்ரிசர்வ்டு (பொதுப்பிரிவு) டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது.
ஐஆர்சிடிசி மூலம் புக் செய்யப்படும் வழக்கமான முன்பதிவு டிக்கெட்டுகளுக்கு இந்த விதிகள் பொருந்தாது. ஏனெனில், முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளைப் பரிசோதிக்கும் போது, பயணிகளின் அரசிடமிருந்து பெற்ற அசல் அடையாள அட்டை ஏற்கனவே சரிபார்க்கப்படுகிறது என்பதால் அவற்றுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications