விஜய்யின் கரூர் பேச்சை கவனிச்சீங்களா? அதே மோடி ஸ்டைல் பேச்சு.. இந்த 10 விஷயம் ரொம்ப முக்கியம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூரில் இன்று முதல்வர் விஜய் பேச்சை கவனித்தவர்களுக்கோ அல்லது கடந்த சில மாதங்களாக அவரின் பிரச்சாரத்தில் அவரின் பேச்சை கவனித்தவர்களுக்கோ ஒரு விஷயம் புரிந்திருக்கும்.. அவரிடம் மோடி பேச்சின் சாயல் இருப்பது! ஆம் பிரதமர் மோடி பயன்படுத்தும் அதே யுக்தியை இன்று கரூரிலும், இதற்கு முன் பல மேடைகளிலும் விஜய் பயன்படுத்தி இருக்கிறார்.

முதல்வர் விஜய்யின் பேச்சு நடைக்கும், பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு நடைக்கும் இடையே நெருங்கிய பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. மோடி காங்கிரஸைக் குறிவைத்து அரசியல் செய்வது போல், தமிழகத்தில் விஜய் திமுகவைக் குறிவைத்துத் தனது விமர்சனங்களை முன்வைக்கிறார். இருவரின் பேச்சிலும் நெருக்கமான பல ஒற்றுமைகள் உள்ளன.

karur vijay

1. தன்னை பாதிக்கப்பட்டவராகக் காட்டுதல்: மோடி தன்னை எளிய பின்னணியில் இருந்து வந்து பலம் வாய்ந்த காங்கிரஸ் போன்ற பார்மபரிய எதிர்க்கட்சிகளால் குறிவைக்கப்படுபவராகச் சித்தரிப்பது போல, விஜய்யும் தன்னைச் சுற்றிப் பல தடைகள் உருவாக்கப்படுவதாகக் கூறி, திமுக தன்னை தடுப்பதாக கூறி தன்னை ஒரு பாதிக்கப்பட்டவராக காட்டுகிறார். அதாவது மக்களை பாதிக்கப்பட்டவர் போல காட்டாமல் நான் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்.. மக்கள் என்னை காக்க வேண்டும் என்று இருவரும் கூறுகிறார்கள்.

2. நேரடித் தாக்குதல்: பெரிதாக கொள்கை அரசியல், மக்கள் பிரச்சனை பேசாமல்.. தங்களின் பிரதான அரசியல் எதிரிகளான திமுக (விஜய்) மற்றும் காங்கிரஸ் (மோடி) ஆகியோரைக் கடுமையாகத் தாக்குவதையே முதன்மையாகக் கொள்கின்றனர்.

3. எல்லாவற்றிற்கும் எதிர்க்கட்சிகளே காரணம்: எந்த மாதிரியான பிரச்சனை வண்டகளும் அனைத்திற்கும் தங்களின் எதிர்க்கட்சியை முழு முதல் காரணம் எனப் பழிசுமத்துகின்றனர். அதாவது திமுகதான் காரணம் என்று விஜய் சொல்வார் .. நேருதான் காரணம் என்று மோடி சொல்வார்!

4. தவறுகளுக்குப் பொறுப்பேற்காமல் இருப்பது: டிரம்ப் ஒரு பேச்சில் சொல்வார்.. நான் தவறே செய்தாலும் அதை ஏற்க மாட்டேன் என்று. அதைதான் மோடியும், விஜய்யும் செய்கிறார்களா. தங்களின் தரப்பில் எழும் விமர்சனங்கள் அல்லது நிர்வாகத் தவறுகளுக்குத் தார்மீகப் பொறுப்பேற்காமல் அதைத் திசைதிருப்புவது.

5. வட்டார வழக்கு மொழி: மக்களோடு எளிதில் நெருங்குவதற்காக, மோடி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிராந்திய மொழிகளில் பேசுவது போல, விஜய் எளிய சென்னை மற்றும் தமிழ் வட்டார வழக்குகளைப் பயன்படுத்துகிறார். இடை இடையே பட பாடல்களை பாடுவதும்.. தொட மாட்டேன் தொட்டால் விட மாட்டேன் என்று சொல்வதும் இதற்குத்தான்.

6. முட்டுக்கட்டை போடும் எதிர்க்கட்சிகள்: தான் நல்லது செய்ய நினைத்தாலும், ஆளுங்கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ தனக்கு முட்டுக்கட்டை போடுவதாகக் கூறி அனுதாபம் தேடுவது.

7. குடும்பம், பண்பாடு பெருமை: நாட்டின் அல்லது மாநிலத்தின் பாரம்பரியப் பெருமைகளைப் பேசி மக்களின் உணர்வுகளைத் தங்களுக்குச் சாதகமாக ஈர்ப்பது. மோடி மத ரீதியாக பேசுவார்.. விஜய் அதை தவிர்த்து தன்னை ஒவ்வொரு வீட்டுடன் கனெக்ட் செய்து பேசுவார்.

8. வாக்குறுதிகள்: துல்லியமான திட்டங்களை முன்வைக்காமல், பெரிய அளவிலான மாற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவது. அதாவது இதைத்தான் செய்ய போகிறேன் என்று சொல்லாமல் வெறுமனே மாற்றம் என்று சொல்வது.

9. குட்டிக்கதைகள்: மோடியின் 'மோடி கி கேரண்டி' போன்ற முழக்கங்களுக்கு இணையாக விஜய் தனது பேச்சில் குட்டிக்கதைகளையும், எளிமையான முழக்கங்களையும் பயன்படுத்துகிறார்.

10. குடும்ப அரசியலுக்கு எதிரான பேச்சு: ஊழல் மற்றும் குடும்ப அரசியலுக்கு எதிராகத் தான் மட்டுமே தனித்து நின்று போராடும் ஒரு மாற்றுச் சக்தியாகத் தங்களைக் காட்டிக் கொள்கின்றனர்.

கரூர்

இப்போது விஜய்யின் கரூர் பேச்சை கேட்டால்.. மொத்த பேச்சும் இதன் அடிப்படையிலேயே எழுதி இருப்பதை உணர முடியும். விஜய் தனது பேச்சில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் எனக்கு அதிக வலியை தந்தது. எவ்வளவு பெரிய இடத்திற்கு போனாலும் அந்த வலி மாறாது. வாழ்வின் மிகப்பெரிய வலி.. காவல்துறை நினைத்திருந்தால் கரூர் கூட்டத்தை ரத்து செய்திருக்கலாம்.. கரூர் நெடுஞ்சாலையில் இருந்து கூட்டத்திற்கு அழைத்து வந்து காவல்துறை நாடகம் ஆடியது.

கரூர் சம்பவத்தின் மூளை யார்? கரூரில் என் அக்கா, தங்கைகளை இழந்தேன்.. குழந்தைகளை இழந்தோம்.. அந்த பழியை எங்கள் மீது தூக்கி போட்டீர்கள்.. வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா? நமக்காக வந்துள்ள மக்களை காக்க வைத்து ஆதாயம் தேடுபவன் நான் அல்ல.. பணமா, ஜனமா என்றால் எனக்கு ஜனம் தான் முக்கியம்.

ஒவ்வொரு முகமூடியாக கிழிகிறது.. திரும்பிய பக்கம் எல்லாம் கதறல்.. கதறல்.. கதறல்.. கட்சி நிதி என்றதுமே எடுத்தார்கள் பாருங்க ஓட்டம்.. குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும்.. எந்தக் கட்சி என்று கூட நான் சொல்லவில்லை. எங்க அப்பா பீரோவுக்குள் இல்லை என்பது போல் அவர்களின் செயல்பாடு உள்ளது.

இன்னும் சில நாட்களில் விஜய் அரசின் விஸ்வரூபத்தை பார்ப்பீர்கள்.. வாய தொறங்க சிஎம் என்கிறார்கள்.. ஆனால் வாயை திறந்தால் ஓடிவிடுகிறார்கள்.. 5 நிமிடம் பேசினாலே கொளத்தூரில் கொத்து பரோட்டா போடப்பட்டுள்ளது.. திமுக, அதிமுக இரண்டும் கூட்டுக் களவாணிகள்.. எனது மனதை விட்டு கரூர் நீங்கவே நீங்காது.. தவெகவுக்கு எதிராக நடந்த சூழ்ச்சியை வரும் தலைமுறைக்கும் தெரியப்படுத்த வேண்டும். அதனால் கரூரில் தவெக சார்பாக ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்படும்

மக்கள் அமைத்துக் கொடுத்த அரசு மீது டிசைன் டிசைனாக குறை மட்டும் கூறுவார்கள்; தீய சக்தியும், தீர்ந்த சக்தியும் 'பார்ட்டி பண்ட்' என்ற பெயரில் அனைத்து துறைகளிலும் கொள்ளை; சட்டப்பேரவையில் பார்ட்டி பண்ட் என கூறியதும் எடுத்தார்கள் பாருங்கள் ஒரு ஓட்டம்; குற்றம் உள்ள நெஞ்சம் தான் குறுகுறுக்கும்.

ஸ்டாலின் சார் மீது எனக்கு தனிப்பாசம் இருக்கிறது. அவர் வெளிநாடு சென்று ஓடி ஒழியவில்லை. ஆனால் சிங்கப்பூரில் ஒருவர் ஒழிந்திருக்கிறார். நான் கரூர் வந்ததும் ஒருவர் ஓடிவிட்டார்.. இந்த விஜய்யை கண்டு திமுகவினர் அஞ்சி ஓடி ஒழிகிறார்கள்.

மக்களை காக்க வச்சு அரசியல் ஆதாயம் தேடுற அரசியல்வாதி நான் கிடையாது; மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன் இந்த விஜய்; நமக்கு இவ்வளவு வலியும் காயங்களும் கொடுத்தவங்களுக்கு, 2026-ல் நீங்க தக்க பதிலடி கொடுத்துட்டீங்க; ஆனா அது மட்டும் பத்தாது; காலத்துக்கும் எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு நிரந்தரமான பதிலடி கொடுத்துக்கொண்டே இருக்கணும்.

வரபோற இடைத்தேர்தலில் மக்களே இந்த தீயசக்தி திமுகவை நல்லா வச்சு வெளுத்து விடுங்க.. நம்பிக்கையா இருங்க.. நல்லதே நடக்கும்! என்று விஜய் கோபமாக பேசி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+