தவெகவில் விஜய்யை விட ரொம்ப பவர்புல் நபர் இவர்தான் போலயே! விஜய் உத்தரவையே காற்றில் பறக்க விட்டுட்டாரே
சென்னை: சென்னை முழுக்க தற்போது தவெக போஸ்டர்கள், பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டு வருகின்றன. போஸ்டர்கள் தடை செய்யப்பட்ட இடங்களில் கூட இப்படி அதிக அளவில் ஒட்டப்படுகின்றன. இதற்கெல்லாம் பின் முக்கியமான ஒரு நிர்வாகி இருப்பதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. அந்த நிர்வாகி மீது ஆக்சன் எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய்க்கு கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.
சென்னையை ஒரு உலகத்தரம் வாய்ந்த, தூய்மையான மற்றும் அதிநவீன நகரமாக மாற்ற வேண்டும்.. அதற்குத் தடையாக இருக்கும் பேனர் மற்றும் போஸ்டர் கலாச்சாரத்திற்கு நம் கட்சியில் இடமே இல்லை.. என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதல்வருமான விஜய் தனது தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் மிகக் கடுமையான உத்தரவை அண்மையில் பிறப்பித்திருந்தார்.

ஆனால், இந்த உத்தரவு சென்னையில் வெறும் காகித அளவில்தான் இருக்கிறதா என்ற கேள்வி தற்போது சமூக வலைத்தளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் பலமாக எழுந்துள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் முதல்வரால் அடையாளப்படுத்தப்பட்ட சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏவும், சென்னை புறநகர் மாவட்டச் செயலாளருமான ஈசிஆர் சரவணன் இந்த உத்தரவை மதிக்கவில்லையோ என்ற புகார் எழுந்துள்ளது. அவருக்கு எதிராக பொதுமக்கள் தரப்பில் கடுமையான புகார்கள் எழுந்து வருகின்றன.
கட்டுப்பாடுகளை மீறி போஸ்டர்கள்
ஈசிஆர் சரவணன், கட்சித் தலைமை வகுத்த கட்டுப்பாடுகளை மீறி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் தவெக அடிமட்டத் தொண்டர்கள் மத்தியிலேயே எழத் தொடங்கியுள்ளது. சென்னை திருவான்மியூர், மேடவாக்கம், சோழிங்கநல்லூர் மற்றும் ஒட்டுமொத்த ஓ.எம்.ஆர் ஐடி காரிடார் பகுதிகள் முழுவதையும் சுவரொட்டிகளாலும், பிரம்மாண்ட பேனர்களாலும் அவர் ஆக்கிரமித்திருப்பதுதான் இந்த சர்ச்சைக்குக் காரணம்.
முதல்வர் விஜய்யைப் பாராட்டுவதாகக் கூறிக்கொண்டு, சென்னை மாநகரின் அழகைக் கெடுக்கும் வகையில் மேம்பாலத் தூண்கள், பொதுச் சுவர்கள், ஏன் தனிநபர்களின் வீடுகளின் சுவர்களைக் கூட விட்டுவைக்காமல் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களும் போஸ்டர்களும் பொதுமக்களைக் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளன.
சமூக வலைத்தளங்களில், போஸ்டர் அராஜகம் என்று குறிப்பிட்டு ஈசிஆர் சரவணனின் இந்த போக்கைக் கண்டித்து நெட்டிசன்கள் பதிவுகளைக் குவித்து வருகின்றனர்.
பின்னணியில் இருக்கும் பேனர் பிசினஸ்
அரசியலுக்கு வருவதற்கு முன்பாக ஈசிஆர் சரவணன் பிரின்டிங் மற்றும் பேனர் டிசைன் தொழில் செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பேனர் தொழிலதிபரான சரவணன், இன்னும் அந்தத் தொழிலின் மோகத்தில் இருந்து வெளியே வரவில்லை போலிருக்கிறது. தலைவரின் உத்தரவை விடத் தனது விளம்பரமே முக்கியம் என்று நினைக்கிறார் என உள்ளூர்வாசிகள் முணுமுணுக்கிறார்கள்.
கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் மூலம் தலைமை வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலோ, போக்குவரத்தைப் பாதிக்கும் வகையிலோ பேனர்கள், கட்-அவுட்டுகள் வைத்தால் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை பாயும்" என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த எச்சரிக்கையையெல்லாம் இவர் சட்டை செய்ததாகத் தெரியவில்லை.

கட்சிக்குள் வெடிக்கும் புகைச்சல்
ஒருபுறம் விஜய் சென்னையைத் தூய்மையான, நவீன உலக நகரமாக மாற்றத் துடிக்கிறார். மறுபுறம் அவரது சொந்தக் கட்சி எம்எல்ஏவே அதற்கு நேர்மாறாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பது எதிர்க்கட்சிகளுக்கும் ஒரு நல்ல அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது. கட்சிக்கு உள்ளேயும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
தலைவருக்குக் கட்டுப்படாத இந்த பேனர் கலாச்சாரத்திற்கு விஜய் எப்போது முற்றுப்புள்ளி வைப்பார்? என்பதே சென்னை மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பு.















Click it and Unblock the Notifications