’அவர' விடாதீங்க.. எப்படியாவது வாங்கிடு! மருமகனுக்கு கடிதம் எழுதிய ஜெயக்குமார்! இத்தனை லட்சங்களா?
நெல்லை: நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரனிடம் ரூ.89 லட்சத்தை வழக்கு தொடர்ந்து பெற வேண்டுமென மருமகனுக்கு நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதியதாக புதிய கடிதம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேபி ஜெயக்குமார் மாயமானதாக வெளியான தகவல் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜெயக்குமாரின் உடல் எரிந்த நிலையில் உவரி அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்தது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக நெல்லை எஸ்.பி தெரிவித்துள்ளார்.
தனக்கு சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி, ஏப். 30-ம் தேதியிட்ட கடிதத்தை நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே.ஜெயக்குமார் தனசிங், எஸ்.பி.க்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. 'மரண வாக்குமூலம்' எனக் குறிப்பிட்டு ஜெயக்குமார் எழுதியுள்ள கடிதத்தில், காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு உள்ளிட்டோர் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பலரது பெயர்கள் மற்றும் அவர்களது செல்போன் எண்களை குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் எழுதிய மரண வாக்குமூலம் கடிதம் தனக்கு அனுப்பப்படவில்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் மறுத்துள்ளார்.
மேலும் தான் அவரிடம் ரூ.70 லட்சம் பணம் வாங்கியதாகக் கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது. அந்தக் கடிதத்தில் உள்ள கையெழுத்து யாருடையது என்பதை காவல் துறை விசாரிக்கும். நான் அவரை மிரட்டவும் இல்லை என ரூபி மனோகரன் கூறியுள்ளார். இந்த நிலையில் நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரிடம் 89 லட்ச ரூபாயை வழக்கு தொடர்ந்தாவது பெற வேண்டுமென மருமகனுக்கு ஜெயக்குமார் எழுதியதாக கடிதம் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அதில் நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரனிடம் 78 லட்சம், கேவி தங்கபாலு ரூபி மனோகரனிடம் வாங்கிக் கொள்ளச் சொன்ன 11 லட்சம் என மொத்தம் 89 லட்சத்தை வழக்கு தொடர்ந்து பெற வேண்டும், சி.சி.எம் பள்ளி நிர்வாகியிடம் 30 லட்சத்தை நான்கு வருட வட்டியோடு வசூல் செய்ய வேண்டும், ஆனந்தராஜா என்பவரிடம் 46 லட்சத்திற்கு வட்டியோடு வசூல் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணையின் போது இந்த கடிதம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
















Click it and Unblock the Notifications