பல் பிடுங்கிய விவகாரம்! களத்தில் இறங்கிய அமுதா ஐஏஎஸ்! போலீஸ் நிலைய சிசிடிவி கேமராக்கள் அதிரடி ஆய்வு
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் விசாரணை அதிகாரி பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், அமுதா ஐஏஎஸ் இன்று போலீஸ் நிலையத்தில் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகள் மிகக் கொடூரமாக நடத்தப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அங்கே விசாரணைக்குச் சென்றவர்கள் பற்கள் பிடுங்கப்பட்டன.
ஏஎஸ்பி பல்வீர்சிங் என்பவர் சிறு சிறு விவகாரங்களில் கைதானவர்களையும் கூட கொடூரமாக நடத்தியுள்ளார்.. விதிகளுக்குப் புறம்பாகக் குறடு உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு பற்களைப் பிடுங்கி சித்ரவதை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

பல்வீர் சிங்: இந்தச் சம்பவம் மாநிலம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்வீர்சிங் முதலில் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டு, அதைத் தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், இந்த விவகாரத்தில் இப்போது அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் இந்த விவகாரத்தில் வெளிவரும் தகவல்கள் பகீர் கிளப்புவதாகவே உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் முதலில் சாட்சி அளித்த நிலையில், அதன் பிறகு அவர்களில் சிலர் பிறழ் சாட்சியாக மாறிய நிகழ்வுகளும் நடந்தன. போலீசார் அவர்களை மிரட்டியதாகவும் பணம் கொடுத்ததாகவும் எல்லாம் தகவல்கள் வெளியானது.
அமுதா ஐ.ஏ.எஸ் விசாரணை: இப்படி இந்த வழக்கில் தொடர்ந்து ஏகப்பட்ட ட்விஸ்ட்கள் அரங்கேறி வந்தன. இதனிடையே இது குறித்து விசாரிக்கத் தமிழ்நாடு அரசு விசாரணை அதிகாரியாக ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸை நியமித்து. இதையடுத்து உடனடியாக அம்பாசமுத்திரம் சென்ற அமுதா, அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 10ஆம் தேதி விசாரணையைத் தொடங்கினார்.
இருப்பினும், அப்போது யாரும் விசாரணையில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான் இன்றும் நேற்றும் அமுதா ஐஏஎஸ் மீண்டும் இந்த விவகாரத்தில் விசாரணையைத் தொடங்கினார். அம்பை தாலுகா அலுவலகத்துக்கு நேரில் வந்து பல்வீர்சிங் மீதான புகார்கள் குறித்து சாட்சியம் அளிக்கலாம் என்றும் நேரில் வர முடியாதவர்கள் மொபைல் அல்லது மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கலாம் என்று கூறப்பட்டது.

நேரில் விசாரணை: இதனிடையே விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில், உயர்மட்ட விசாரணைக் குழு அதிகாரி அமுதா ஐஏஎஸ் தலைமையில் கடந்த 2 நாட்கள் நடைபெற்ற 2ஆம் கட்ட விசாரணை நிறைவடைந்துள்ளது. இதுவரை 14 பேர் அமுதா ஐஏஎஸிடம் நேரில் ஆஜராகி விளக்கமளித்தாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே அம்பாசமுத்திரம் காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அமுதா ஐஏஎஸ் இன்று நேரில் விசாரணை நடத்தினர்.
மேலும், விசாரணை கைதிகள் பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பாக விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களிடம் விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ் விசாரணை காவல் நிலைய கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவற்றையும் அவர் ஆய்வு செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications